Published : 28 Nov 2020 04:38 PM
Last Updated : 28 Nov 2020 04:38 PM

கோவில்பட்டி நீர்வரத்து ஓடையில் இருந்து 108 ஆக்கிரமிப்பு கடைகள் இடித்து அகற்றம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு

கோவில்பட்டி நீர்வரத்து ஓடையில் இருந்த 108 ஆக்கிரமிப்புக் கடைகள் இன்று இடித்து அகற்றப்பட்டன. இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

கோவில்பட்டி பிரதான சாலையில் உள்ள செவல்குளம் நீரோடையில் அருள்மிகு பூவனநாதசுவாமி திருக்கோயில் தேவஸ்தானப் பயன்பாட்டுக்கு உட்பட்ட 108 கடைகள் மற்றும் தனிநபர் ஆக்கிரமிப்பில் 25 கடைகள் இருந்தன.

இந்நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் 28-ம் தேதி கோவில்பட்டி இலக்குமி ஆலை மேம்பாலம் முதல் ரயில்வே மேம்பாலம் வரை சுமார் ரூ.7 கோடி மதிப்பீட்டில் சாலை விரிவாக்கப் பணி தொடங்கி நடந்து வருகிறது.

சாலை விரிவாக்கப் பணிகளை, ஓடை மீது கட்டப்பட்டுள்ள நீர்வரத்து ஓடை ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்றிய பின்னரே, சாலை விரிவாக்கப் பணி முறையாக நடைபெற வேண்டும் என ஆக்கிரமிப்பு மீட்புக்குழுவினர் மற்றும் அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதுதொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் ஆக்கிரமிப்புகள் அகற்றுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் 2019 ஆக.17-ம் தேதி நடந்தது.

இதையடுத்து, ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி 2019 ஆக.26-ம் தேதி நடந்தது. இதில், ஓடை மீது கட்டப்பட்ட தனிநபர் ஆக்கிரமிப்பு கட்டடங்களான 13 கடைகள் அகற்றப்பட்டன. மீதமுள்ள தனியாருக்கு சொந்தமான 12 கடைகள் மற்றும் தேவஸ்தானப் பயன்பாட்டுக்கு உட்பட்ட 108 கடைகளும் நீதிமன்ற வழக்கு நிலுவைக் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், ஓடை மீது கட்டப்பட்ட தனிநபர் ஆக்கிரமிப்பு கட்டடங்களான 12 கடைகள் குறித்த நீதிமன்ற வழக்குகளில் எவ்வித தடை உத்தரவும், தற்போது வரை பிறப்பிக்கபடாததையடுத்து தனிநபர்களால் ஓடைப் புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்து ஓடை மீது கட்டப்பட்டுள்ள கட்டடங்களை, 2019 செப்.12-ம் தேதி கோட்டாட்சியர் விஜயா முன்னிலையில் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்புப் பகுதிகளில் உள்ள தனியார் கடைகள் அகற்றப்பட்டன.

இந்நிலையில், பூவனநாத சுவாமி கோயிலுக்குப் பாத்தியப்பட்ட நீரவரத்து ஓடை ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டுள்ள 108 கட்டமைப்புகளுக்கும், உயர்நீதிமன்ற மதுரை கிளை மற்றும் உச்சநீதிமன்றத்தில் இருந்த வழக்குகளுக்கு தீர்வு கிடைக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரின் நீர்வரத்து ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான அறிவிப்பு ஆணையை கோயில் நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது.

இதையடுத்து, கடந்த 26-ம் தேதி வருவாய் துறை மற்றும் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் ஒலிபெருக்கி மூலம் நீர்வரத்து ஓடையில் உள்ள ஆக்கிரமிப்பாளர்கள் கட்டடங்களில் இருந்து தங்களது பொருள்களை காலி செய்துகொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டது.

நேற்று காலை 6 மணிக்கு கோட்டாட்சியர் விஜயா தலைமையில், நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளர் ராஜு, வட்டாட்சியர் மணிகண்டன், மின்வாரிய செயற்பொறியாளர் சகர்பான், கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் முருகானந்தம், நகராட்சி ஆணையர் ராஜாராம், பொறியாளர் கோவிந்தராஜன், நகரமைப்பு அலுவலர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில், 7 ஜே.சி.பி., 2 பிரேக்கர், 2 கிட்டாச்சி உதவியுடன் 108 நீர்வரத்து ஓடை ஆக்கிரமிப்புகள் கடைகள் அகற்றப்பட்டன.

தூத்துக்குடி மாவட்ட கூடுதல் ஆட்சியர் விஷ்ணுசந்திரன் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை பார்வையிட்டு அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

தொடர்ந்து மாலையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி பார்வையிட்டு, ஆக்கிரமிப்பு இடிபாடுகளை விரைவில் முழுவதுமாக அகற்ற அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமார் தலைமையில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோபி, காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் கலைகதிரவன், சங்கர் மற்றும் 10 ஆய்வாளர்கள், 25 உதவி ஆய்வாளர்கள் உள்பட 270 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x