

நிவர் புயல் மீட்பு நடவடிக்கைகளுக்கு கடலூர் மாவட்டத்துக்கு வந்திருந்த தேசிய பேரிடர் மீட்பு படையினருக்கு மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி பாராட்டு தெரிவித்து விருந்தளித்தார்.
நிவர் புயல் எச்சரிக்கை காரணமாக கடலூர் மாவட்டத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, பொதுமக்களை பாதுகாக்கும் விதமாக, பல்வேறு பாதுகாப்பு மையங்களில் அமைக்கப்பட்டு, ஆட்டோ மற்றும் தண்டோரா மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, பாதுகாப்பு மையங்களில் தங்கவைக்கப்பட்டனர். மேலும், அப்பொதுமக்களுக்கு மூன்று வேளையும் தரமான உணவு மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக, கடலூர் மாவட்டத்தில் நிவர் புயல் மீட்பு பணிகளை மேற்கொள்வதற்காக அரக்கோணத்திலிருந்து 142 பாதுகாப்புப் படை வீரர்கள் அடங்கிய தேசிய பேரிடர் மீட்புப் படை குழுவினர் கடலூர் மாவட்டத்திற்கு வந்திருந்தனர். இப்படையினர் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, கடலூரில் 3 குழுக்களும், சிதம்பரம் மற்றும் பரங்கிப்பேட்டை பகுதிகளில் 3 குழுக்களும் முகாமிட்டு பேரிடர் மீட்பு பணிகளை மேற்கொள்ள தங்கியிருந்தனர்.
இப்படையினரை சிறப்பிக்கும் விதமாக நேற்றிரவு (நவ. 27) கடலூர் தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி தேசிய பேரிடர் மீட்பு படையினருக்குப் பாராட்டு தெரிவித்து, விருந்து அளித்தார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ், கமாண்டர் மனோஸ் பிரபாகரன், கூடுதல் ஆட்சியர் ராஜகோபால் சுங்கரா, மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) கார்த்திகேயன், வருவாய் கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.