Published : 28 Nov 2020 01:41 PM
Last Updated : 28 Nov 2020 01:41 PM

ஜல்லிக்கட்டுப் போட்டி நடக்குமா?- கரோனா முடிவுக்கு வராததால் தென் மாவட்ட மக்கள் கவலை

தமிழகத்தில் கரோனா தொற்று நோய் இன்னும் முடிவுக்கு வராததால் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடக்குமா? நடக்காததா? என்று தென் மாவட்ட மக்கள் கவலையடைந்துள்ளனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் விமரிசையாக நடக்கும். ஜனவரி 14-ம் தேதி அவனியாபுரத்தில் தொடங்கி தொடர்ச்சியாக 4 மாதங்கள் தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் களைகட்டும்.

இந்தப் போட்டிக்காக தென் மாவட்ட கிராமங்களில் வீர விளையாட்டு ஆர்வலர்கள் முதல் சாதாரண பொதுமக்கள் வரை ஜல்லிக்கட்டு காளைகளை வளர்க்கிறார்கள்.

காளைகளுக்கு பிரத்தியேக பயிற்சி, தீவனம் என்று நாள் ஒன்றுக்கு ஒவ்வொரு காளைக்கும் ரூ.500 முதல் ரூ.1000 வர செலவு செய்து தங்களுடைய பிள்ளைகளைப் போல் இந்தப் போட்டிக்காக அவற்றை தயார் செய்கிறார்கள்.

அதுபோல், மாடுபிடி வீரர்களும் டிசம்பர் முதலே காளைகளை அடக்கும் பயிற்சியில் ஈடுபடுவார்கள். ஒவ்வோர் ஆண்டும், டிசம்பர் தொடக்கத்தில் இருந்து அந்தந்த கிராம கமிட்டிகள் சார்பில் விழா ஏற்பாடுகள் தொடங்கிவிடும்.

அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகளைத் தொடர்ந்து மற்ற கிராமங்களில் நடக்கும் போட்டி தேதிகள் ஜனவரி முதல் வாரத்திலேயே முடிவு செய்யப்பட்டு விடும்.

வரும் பொங்கல் ஜல்லிக்கட்டுப் போட்டிக்காக தற்போதே அதன் ஆர்வலர்கள் ஆயிரக்கணக்கான காளைகளை வளர்த்து தயார் நிலையில் வைத்துள்ளனர்.

இந்நிலையில் தென் மாவட்டங்களில் கரோனா பரவல் இன்னும் முடிவுக்கு வராமல் பரவிக் கொண்டிருகு்கிறது. ஆனால், மக்கள், தொழில் நிறுவனங்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். தீபாவளிப் பண்டிகையும் வழக்கம்போல் உற்சாகம் குறையாமல் நடந்து முடிந்துள்ளது.

அந்தப் பண்டிகைப் பொருட்கள் வாங்குவதற்காக மக்கள் கடைகளில் குவிந்ததால் கேரள ஓணம் பண்டிகை கொண்டாட்டத்திற்குப் பிறகு அங்கு கரோனா பரவியது போல் தமிழகத்திலும் பரவக்கூடும் என சுகாதாரத் துறையினர் அச்சமடைந்திருந்தனர். ஆனால், தற்போது அவர்கள் எதிர்பார்த்தது போல் கரோனா பரவல் இல்லை. வழக்கமான எண்ணிக்கையிலேயே கரோனா தொற்று கண்டறியப்படுகிறது. அதனால், கரோனாவால் ஜல்லிக்கட்டுப்போட்டி தடைபடாது என அதன் ஆர்வலர்களும், பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதுகுறித்து கால்நடை பராமரிப்புத் துறை மதுரை மண்டல இயக்குனர் ராஜதிலகனிடம் கேட்டபோது, ‘‘ஜல்லிக்கட்டுப்போட்டி பற்றி இதுவரை அரசு தரப்பில் இருந்து எந்த தகவலும் வரவில்லை.

வழக்கமாக ஜனவரி முதல் வாரத்தில்தான் ஜல்லிக்கட்டுப்போட்டி நடத்துவதற்கான அரசு ஆணை வெளியிடப்படும். அதற்கு பிறகுதான் மதுரை மாவட்டத்தில் அரசு சார்பில் போட்டி ஏற்பாடுகள் தொடங்கப்படும். இன்னும் ஜல்லிக்கட்டுப்போட்டி நடத்துவதற்கு 45 நாட்கள் உள்ளதால் தற்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x