சடலத்தைக் கொண்டுவரக்கூடாது என்ற ஊர் கட்டுப்பாட்டால் மருத்துவமனையிலிருந்து வென்டிலேட்டருடன் ஆம்புலன்ஸில் கொண்டுவரப்பட்ட இளைஞர் அகற்றிய சிறிது நேரத்தில் உயிர் பிரிந்த பின் உடல் தகனம்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

விபத்தில் சிக்கி கவலைக்கிடமாக இருந்தவரை வீட்டுக்கு கொண்டு வந்த பின் வென்டிலேட்டரை அகற்றினர். அதன்பின் அவர் உயிரிழந்ததால் மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டு உடல் தகனம் செய்யப்பட்டது. சடலத்தை ஊருக்குள் கொண்டுவரக் கூடாது என ஊர் கட்டுப்பாடு காரணமாக நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள விராச்சிலையை அடுத்த வீரணாம்பட்டியைச் சேர்ந்தவர் பிச்சை மகன் மணிமாறன்(40). இவர், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் டீ கடை வைத்து நடத்தி வந்தார். கடந்த இரு தினங்களுக்கு முன் விபத்தில் காயமடைந்த இவர் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு மணிமாறன் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, வீரணாம்பட்டியைச் சேர்ந்தவர்கள் வெளியூர்களில் இறந்தால், அவர்களது சடலத்தை ஊருக்குள் கொண்டு வராமல், நேராக மயானத்துக்கு கொண்டு செல்வது வழக்கம் எனக் கூறப்படுகிறது.

இதனால், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மணிமாறனை வென்டிலேட்டர் பொருத்தப்பட்ட ஆம்புலன்ஸில் நேற்று வீரணாம்பட்டியில் உள்ள அவரது வீட்டுக்கு உறவினர்கள் கொண்டு வந்தனர்.

அதன்பின் வென்டிலேட்டர் அகற்றப்பட்ட சில நிமிடங்களில் அவர் உயிரிழந்ததாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து, அவரது உடல் மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

இதுகுறித்து வீரணாம்பட்டி சேர்ந்தவர்கள் கூறியதாவது:

இந்த ஊரைச் சேர்ந்தவர்கள் வெளியூர்களில் இறந்தால், சடலமாக இங்கு கொண்டு வரும்போது தொற்று வியாதி ஏற்படும் என்பதால், ஊருக்குள் சடலத்தை எடுத்து வர அனுமதிப்பதில்லை. நேரடியாக மயானத்துக்கு கொண்டு சென்று இறுதி சடங்குகளை செய்வோம் என்றனர்.

நடவடிக்கை எடுக்கப்படும்

இதுகுறித்து சுகாதாரத் துறையினரிடம் கேட்டபோது, ‘‘இதுபோன்ற சம்பவம் அங்கு நடைபெறுவது தொடர்பாக தகவல் இல்லை. புகார்களும் வந்ததில்லை. இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in