Last Updated : 27 Nov, 2020 09:41 PM

 

Published : 27 Nov 2020 09:41 PM
Last Updated : 27 Nov 2020 09:41 PM

இந்தியில் கடிதம் அனுப்ப மத்திய அரசுக்குத் தடை விதிக்கக்கோரி மதுரை எம்.பி. வழக்கு; உள்துறை அமைச்சருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

சு.வெங்கடேசன்: கோப்புப்படம்

மதுரை

தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்தி மொழியில் கடிதம் அனுப்ப தடை விதித்து, ஆங்கிலத்தில் மட்டும் கடிதம் அனுப்ப உத்தரவிடக்கோரி மதுரை எம்.பி. தொடர்ந்துள்ள வழக்கில் மத்திய உள்துறை அமைச்சர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

"மத்திய ரிசர்வ் படையில் குரூப் பி மற்றும் குரூப் சி பிரிவில் 780 பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு டிச. 20-ல் நடைபெறுகிறது. இதற்கு தமிழகம், புதுச்சேரியில் ஒரு தேர்வு மையம் கூட அமைக்கவில்லை. இதனால் இவ்விரு மாநில விண்ணப்பதாரர்களின் நலனுக்காக குறைந்தபட்சம் ஒரு தேர்வு மையம் அமைக்கக் கோரி உள்துறை அமைச்சகம் மற்றும் சிஆர்பிஎப் பொது இயக்குநருக்கு அக்.9-ல் கடிதம் அனுப்பினேன்.

எனது கடிதத்துக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய், நவ. 9-ல் இந்தி மொழியில் பதில் கடிதம் அனுப்பியிருந்தார். இந்தியில் பதில் அளித்தது சட்ட விதி மீறலாகும்.

இது தொடர்பாக உள்துறை இணை அமைச்சகத்திற்கு நவ. 19-ல் எழுதிய கடிதத்துக்கு இதுவரை பதில் வரவில்லை. இந்தியில் அனுப்பிய கடிதத்தை திரும்ப பெறவோ, ஆங்கிலத்தில் கடிதம் அனுப்பவோ நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்தியில் மட்டுமே பதில் அளிக்கும் நடைமுறை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தமிழக மக்கள் தங்கள் குறைகளை நிவர்த்தி செய்யக்கேட்டு மத்திய அரசுக்கு அனுப்பும் கடிதங்களுக்கும் இந்தியில் பதிலளிப்பது தொடர்கிறது. இது அரசியலமைப்பு சட்ட உரிமைகளுக்கும், 1963-ம் ஆண்டின் அலுவல் மொழிச் சட்டத்திற்கும் முரணானதாகும். இந்தி பேசாத மாநிலங்களை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், மக்களின் உரிமைகளை மீறுவதாகும்.

எனவே, தமிழக அரசுக்கும், தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழக மக்களுக்கு இந்தி மொழியில் கடிதம் அனுப்பக்கூடாது என்றும், ஆங்கிலத்தில் மட்டுமே கடிதங்கள் அனுப்ப வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். எனக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் அனுப்பிய இந்தி கடிதத்தில் ஆங்கில வடிவத்தை உடனே வழங்கவும், விதியை மீறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்".

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் இன்று (நவ. 27) விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர்கள் புருஷோத்தமன், கண்ணன் ஆஜராகினர். மனு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர், அலுவல் மொழித்துறை இணைச் செயலாளர், சிஆர்பிஎப் இயக்குநர் ஜெனரல் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை டிச. 8-க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x