Last Updated : 27 Nov, 2020 09:22 PM

 

Published : 27 Nov 2020 09:22 PM
Last Updated : 27 Nov 2020 09:22 PM

தமிழ் வழிக்கல்வி சலுகையில் பணிக்கு சேர்ந்தோர் பட்டியல் தாக்கல் செய்ய வேண்டும்: டிஎன்பிஎஸ்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழ் வழிக்கல்வி பயின்றவர்களுக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டு அடிப்படையில் பணிக்கு சேர்ந்தவர்களின் பட்டியலை தாக்கல் செய்ய டிஎன்பிஎஸ்சி-க்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த சக்திராவ், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

"டிஎன்பிஎஸ்சி 2019-ல் குரூப் 1 பணி நியமனத்தில் தொலை நிலைக்கல்வியில் பயின்றவர்களுக்கு தமிழ் வழிக்கல்வி பயின்றவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் நேரடியாக தமிழ் வழியில் கல்வி பயின்ற எனது பணி நியமனம் தடைப்பட்டது. எனவே, குரூப் 1 நியமனத்துக்குத் தடை விதித்து, நேரடியாக தமிழ் வழிக்கல்வி பயின்றவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கி பணி நியமனங்களை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்".

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் இன்று (நவ. 27) விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில் மற்ற மாநில பல்கலைக்கழகங்களில் படித்து, தமிழ் வழியில் கல்வி பயின்றதாக சான்றிதழ் பெற்று அரசு பணிக்கு சேர்கின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிபதிகள், "கடந்த 5 வருடங்களில் வெளிமாநில பல்கலைக்கழகங்களில் தொலைதூர கல்வியில் படித்து தமிழ் வழி கல்வி சான்றிதழ் வழங்கி அரசுப் பணிக்கு சேர்ந்தவர்கள் எத்தனை பேர்? பட்டப்படிப்பு முடித்து டிஎன்பிஎஸ்சி தேர்வெழுதி 20 சதவீத சலுகை அடிப்படையில் வேலைக்கு சேர்ந்தவர்கள் எத்தனை பேர்? இதில் நேரடியாக கல்லூரிகளில் படித்தும், தொலைநிலைக் கல்வியில் படித்தும் 20 சதவீத இடஒதுக்கீட்டில் வேலைக்கு சேர்ந்தவர்கள் எத்தனை பேர்? என்பது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி பதிலளிக்க வேண்டும். தவறினால் லஞ்ச ஒழிப்பு விசாரணைக்கு உத்தரவிடப்படும்" என உத்தரவிட்டனர்.

பின்னர் விசாரணையை டிச.4-க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x