Last Updated : 27 Nov, 2020 09:22 PM

 

Published : 27 Nov 2020 09:22 PM
Last Updated : 27 Nov 2020 09:22 PM

வங்கிகள் கடனுக்கு வட்டிக்கு மேல் வட்டி வசூலிப்பது நியாயமற்றது: உயர் நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி

"ஆயிரம் கோடி ரூபாய் வரை கடன் வாங்கியவர்கள் சுலபமாக வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்கின்றனர். சிறிய அளவில் கடன் வாங்கியவர்களை கடனை கட்டச் சொல்லி துன்புறுத்துகிறார்கள். கடனுக்கு வட்டிக்கு மேல் வட்டி வாங்குவது நியாயமற்றது" என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

பெரம்பலூரைச் சேர்ந்த ஜெயராஜ், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

"திருச்சி சின்னக்கடை வீதியில் உள்ள பெடரல் வங்கியில் விவசாய நிலங்களை அடமானம் வைத்து ரூ.50 லட்சம் நீண்ட கால கடன், ரூ.15 லட்சம் வீட்டுக் கடன் வாங்கினேன். இதில் வீட்டுக்கடனுக்காக ரூ.18 லட்சமும், நீண்ட கால கடனில் ரூ.25 லட்சமும் செலுத்திவிட்டேன்.

பின்னர், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கடனை திரும்ப செலுத்த முடியவில்லை. இதனால் நான் அடமானம் வைத்த விவசாய நிலத்தை ஏலம் விடுவதற்கான நடவடிக்கையை வங்கி மேற்கொண்டது. இதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தேன். அந்த வழக்கில் ரூ.75 லட்சம் செலுத்த உத்தரவிடப்பட்டது. அதற்கான வரைவு காசோலையை வங்கி மேலாளரிடம் அக். 7-ல் கொடுத்தேன். அவர் காசோலையை வீசி எறிந்தார்.

நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது என் விவசாய நிலத்தை தனியாரிடம் விற்று பணத்தை வசூலிக்க வங்கி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே, நீதிமன்ற உத்தரவை ஏற்கவும், விவசாய நிலத்தை தனியாரிடம் வழங்க தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்".

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் இன்று (நவ. 27) விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், "வங்கிகள் கடனை திரும்ப வசூலிக்க சம்பந்தப்பட்டவர்களுக்கு முதலில் நோட்டீஸ் அனுப்ப வேண்டும், அவர்கள் அளிக்கும் பதில் அடிப்படையில் முடிவுகள் எடுக்க வேண்டும், அதன் பிறகே நடவடிக்கை எடுக்க வேண்டும். பணத்தை கட்ட முடியாதவர்களுக்கு வட்டிக்கு வட்டி வாங்குவது நியாயமற்றது.

எந்த அடிப்படையில் கடனை திரும்ப வசூலிக்கும் பொறுப்பை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கின்றனர். தனியார் நிறுவனங்கள் குண்டர்களை வைத்துக் கடன் தொகை வசூலிக்கின்றனர். இதற்கு கடன் வழங்காமலேயே இருக்கலாமே. ஆயிரம் கோடி கடன் வாங்கியவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்கின்றனர். சிறிய அளவில் கடன்கள் வாங்கிய ஏழைகளை பணம் வசூலிக்கிறோம் என துன்புறுத்துகிறார்கள்" என்றனர்.

பின்னர், இந்த வழக்கில் வங்கி மேலாளர் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் வரைவு காசோலையை தூக்கி எறிந்தது தொடர்பான சிசிடிவி காட்சிகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும், வங்கி மேலாளர் காணொலிக் காட்சி மூலமாக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை டிச. 1-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x