Published : 27 Nov 2020 01:34 PM
Last Updated : 27 Nov 2020 01:34 PM

பேரறிவாளனுக்கு மேலும் 1 வாரம் பரோல்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

தமிழக அரசின் எதிர்ப்பை மீறி பேரறிவாளனுக்குக் கூடுதலாக ஒரு வாரம் பரோலை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பேரறிவாளன் தனது தண்டனையை நிறுத்திவைக்கக் கோரி தொடர்ந்த வழக்கு கடந்த திங்கட்கிழமை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மருத்துவ சிகிச்சைக்காக பேரறிவாளனுக்கு ஒரு வாரத்திற்கு பரோல் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பின்னர், பிரதான கோரிக்கை தொடர்பான வழக்கை இறுதி விசாரணைக்காக ஜனவரி 19-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். இதனிடையே பேரறிவாளன் தரப்பில், மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள மேலும் 90 நாட்கள் பரோலை நீட்டிக்க வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஒரு இடைக்கால மனு, தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசுத் தரப்பில், “இரண்டு வருட காலத்துக்கு 30 நாட்கள் பரோல் வழங்க அனுமதி உள்ளது. ஆனால், பேரறிவாளனுக்கு நவம்பர் 9 முதல் வழங்கப்பட்டுள்ள பரோலையும் சேர்த்து அவருக்கு 51 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், பேரறிவாளன் 25 கி.மீ. தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்குச் செல்லாமல் 200 கி.மீ. தூரத்தில் சென்னையில் உள்ள மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்று கூறுவதை ஏற்க முடியாது” என்று தெரிவிக்கப்பட்டது.

அப்போது பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர், “பேரறிவாளனுக்கு சிறுநீரகத்தில் 25% அடைப்பு உள்ளது. அதற்கு சிகிச்சை பெற 4 வாரமாவது பரோல் தேவைப்படுகிறது. எனவே, குறைந்தது 4 வாரத்துக்காவது பரோலை நீட்டிக்க வேண்டும்” எனக் கோரினார்.

அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், பேரறிவாளனுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள பரலோடு கூடுதலாக ஒரு வாரத்துக்குப் பரோலை நீட்டித்து வழங்கினர். மேலும், பரோலை நீட்டிப்பது இதுதான் கடைசி முறை என்றும், இதற்கு மேல் நீட்டிக்க முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

அதேபோல, அருகில் உள்ள சி.எம்.சி மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் பேரறிவாளனுக்கு உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவால் பேரறிவாளனின் பரோல் டிசம்பர் 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x