உயர் சிறப்பு மற்றும் மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கான 50% இட ஒதுக்கீடு இந்த ஆண்டு இல்லை: உச்ச நீதிமன்றம் உத்தரவு

உயர் சிறப்பு மற்றும் மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கான 50% இட ஒதுக்கீடு இந்த ஆண்டு இல்லை: உச்ச நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

உயர் சிறப்பு மற்றும் மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு நடப்புக் கல்வியாண்டில் 50% இட ஒதுக்கீடு கிடையாது என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

உயர் சிறப்பு மற்றும் மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பப்படும் என்ற தமிழக அரசின் அரசாணையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக தனியார் மருத்துவர்கள் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், ஹேமந்த் குப்தா, அஜய் ரத்தோகி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு மற்றும் கேவியட் மனுதாரர்கள் தரப்பில் வைக்கப்பட்ட வாதத்தில், “தமிழக அரசின் அரசாணை புதிதல்ல. உயர் சிறப்பு மற்றும் மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு 50% இடங்களை ஒதுக்குவது என்பது தனி இட ஒதுக்கீடு அல்ல. இது ஒருவகையான மாணவர் சேர்க்கைதான் (different mode of admission). இது சேவை மனப்பான்மையுடன் பணி செய்யும் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கான முன்னுரிமையே. மேலும், இது தமிழக அரசின் கொள்கை முடிவு ஆகும். எனவே, இந்த 50% இட ஒதுக்கீட்டை நடப்புக் கல்வி ஆண்டு முதலே அமல்படுத்தலாம்” எனத் தெரிவிக்கப்பட்டது.

''அரசு மருத்துவர்களுக்கு இவ்வாறு தனி இட ஒதுக்கீடு வழங்குவது பாகுபடுத்திப் பார்ப்பதாகும். அவ்வாறு உள் ஒதுக்கீடு செய்ய முடியாது'' என தனியார் மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்க, மத்திய அரசுத் தரப்பிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

அனைத்துத் தரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், இந்த வழக்கு மீதான உத்தரவை இன்று பிறப்பித்தனர்.

அதில், உயர் சிறப்பு மற்றும் மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை நடப்புக் கல்வியாண்டில் வழங்காமல் சேர்க்கையை நடத்த வேண்டும் என மருத்துவக் கவுன்சிலுக்கு உத்தரவிட்டனர்.

மேலும் , இந்த விவகாரம் தொடர்பான அனைத்து மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையை பிப்ரவரி மாதத்துக்கு ஒத்தி வைப்பதாகவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in