6 மாதமாக முடக்கம்; கோயம்பேடு சிறு வியாபாரிகளுக்கு நிவாரணம் கோரி வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

6 மாதமாக முடக்கம்; கோயம்பேடு சிறு வியாபாரிகளுக்கு நிவாரணம் கோரி வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டு 6 மாதங்களாகக் கடை திறக்க அனுமதிக்கப்படாமல் உள்ள கோயம்பேடு காய்கறிச் சந்தை சிறு வியாபாரிகள் 1,256 பேருக்கு நிவாரணம் வழங்கக் கோரிய மனுவுக்குப் பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா ஊரடங்கால் கோயம்பேடு காய்கறிச் சந்தை மூடப்பட்டு, திருமழிசைக்கு மாற்றப்பட்டது. அங்கு 196 கடைகளுக்கு மட்டுமே இடம் ஒதுக்கப்பட்டது. சிறு வியாபாரிகளுக்குக் கடைகள் எதுவும் ஒதுக்கப்படவி்ல்லை.

ஊரடங்கு தளர்த்தப்பட்டு, திருமழிசையில் இருந்து கோயம்பேடு சந்தை கடந்த செப்டம்பர் 28-ம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், சிறிய கடைகளைத் திறப்பது குறித்து அதிகாரிகள் இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

இதனால் கடந்த ஐந்து மாதங்களுக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ள கோயம்பேடு காய்கறிச் சந்தை சிறு வியாபாரிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் உஷா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு, ஜனவரி 28-ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in