Published : 26 Nov 2020 08:50 PM
Last Updated : 26 Nov 2020 08:50 PM

செம்பரம்பாக்கம் ஏரி நீர்த்திறப்பு 1000 அடியாகக் குறைப்பு

சென்னை

செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போதைய நீர்வரத்து 2,162 கன அடியாக உள்ளது. ஏரியில் நீர் இருப்பு 3,132 மில்லியன் கன அடியாக உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து குறைந்ததால், நீர் வெளியேற்றும் அளவை 1000 அடியாகக் குறைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் 2-ம் தேதி பெய்த பெருமழை மற்றும் செம்பரம்பாக்கம் ஏரியை ஒட்டி இருந்த பகுதிகளில் பெய்த 20 செ.மீ.க்கும் மேலான மழை, நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக திடீரென செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து அதிக அளவிலான நீர் திறக்கப்பட்டதால் சென்னையில் பெருவெள்ளம் சூழ்ந்தது.

அதன் நினைவுகள் மாறாத நிலையில், ஆண்டுதோறும் மழை பெய்யும் காலங்களில் சென்னை மற்றும் புறநகர் மக்கள் பயத்துடனே இருப்பார்கள். 2015-ம் ஆண்டு செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி மாலையில் திடீரென திறக்கப்பட்ட நீரால் வீடுகளில் சூழ்ந்த பெருவெள்ளம், உடமைகள் இழப்பு, பலருக்குத் தங்கள் வாழ்நாள் சேமிப்பெல்லாம் இழக்கும் நிலை, உயிரிழப்பு என சென்னையின் வரலாற்றில் மிகுந்த பேரிடராக அமைந்தது.

அதன் துக்கச் சுவடுகளை மறக்காத சென்னை மக்கள் மழை, புயல் என்றாலே செம்பரம்பாக்கம் ஏரி நிரம்புகிறதா? என்று கவனிப்பார்கள். நிவர் அதி தீவிரப் புயல் உருவானபின் தமிழக அரசு உஷாராக இருக்கவேண்டும் என்பதற்காக மத்திய ஜல்சக்தி அமைச்சகம் அரசுக்கு எச்சரிக்கை விடுத்து கடிதம் அனுப்பியது.

செம்பரம்பாக்கம் ஏரி கண்காணிக்கப்பட்டு 22 அடிக்கு மேல் நீர் இருப்பு உயர்ந்ததால் நேற்று புயல் மற்றும் கனமழை காரணமாக 1000 கன அடி நீர் திறக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக உயர்த்தப்பட்டு இரவு 9,000 கன அடி நீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் புயல் கரையைக் கடந்ததால் சென்னைக்கு மழை குறைந்தது.

இதையடுத்து படிப்படியாக வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டது. 5,000 அடி, 3,000 அடி எனக் குறைக்கப்பட்டு காலையில் 550 அடியாகக் குறைக்கப்பட்டது, தற்போது ஏரிக்கு வரும் நீரின் அளவு அதிகரிப்பதால் மீண்டும் வெளியேற்றப்படும் நீரின் அளவு 1000 அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போதைய நீர்வரத்து 2,162 கன அடியாக உள்ளது. ஏரியில் நீர் இருப்பு 3,132 மில்லியன் கன அடியாக உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து குறைந்ததால் நீர் வெளியேற்றும் அளவைக் குறைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். மொத்த நீர் இருப்பு 24 அடி என்கிற நிலையில் தற்போது 22.05 அடியாக உள்ள நிலையில் ஏரியின் நீர் மட்டத்தை 22 அடியில் நிலையாக வைக்கப் பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x