Published : 26 Nov 2020 07:12 PM
Last Updated : 26 Nov 2020 07:12 PM

விளிம்புநிலை மக்களுக்கான பாதுகாப்பு அரண் வருவாய்த்துறை: கோவை ஆட்சியர் பேச்சு

விளிம்புநிலை மக்களுக்கான பாதுகாப்பு அரண் வருவாய்த்துறை என்று கோவை ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் இன்று (26.11.2020) கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன், பொள்ளாச்சி சார் ஆட்சியர் வைத்திநாதன், வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்துராமலிங்கம் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, இன்று (26.11.2020) இந்திய அரசியலமைப்பு நாளை முன்னிட்டு கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் அனைத்துத் துறை அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தலைமையில் இந்திய அரசமைப்பு நாள் உறுதிமொழியினை எடுத்துக் கொண்டனர்.

தொடர்ந்து அலுவலர்கள் மத்தியில் மாவட்ட ஆட்சியர் பேசுகையில், ''வருவாய்த் துறையானது தனது பன்முகத் தன்மையினால் விளிம்பு நிலையில் உள்ளவர்களுக்கும் பாதுகாப்பு அரணாகச் செயல்பட்டு வருகிறது. இத்துறை மக்களின் அன்றாட வாழ்வில் எல்லா நிலைகளிலும் இரண்டறச் கலந்துள்ளது.

இத்துறை அரசின் உடமைகளான நிலம், பொதுமக்களின் உரிமைகள் ஆகியவற்றின் பாதுகாவலனாக இருந்து வருகிறது. விவசாயிகள், மாணவர்கள், தொழில் முனைவோர் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரிவோர் பயன்பெறும் வகையில் பல்வேறு விதமான சான்றிதழ்களை வழங்கி வருகிறது. மேலும் கடன் பெறவும், கல்வி உதவித்தொகை பெறவும், சாதி, பிறப்பு, இறப்பு, வாரிசு மற்றும் வருமானச் சான்றிதழ்களையும் வழங்கி வருகிறது.

வருவாய்த் துறையின் மூலம் வழங்கப்படும் இச்சான்றிதழ்களை வழங்க அரசு இ-சேவை மையங்களில் மூலம் பெறப்படும் விண்ணப்பங்களைப் பரிசீலித்து சான்றிதழ்கள் உரிய காலத்தில் பொதுமக்களுக்குக் கிடைத்திட வருவாய்த்துறை அலுவலர்கள் விரைந்து பணியாற்றிட வேண்டும்.

மேலும், சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் முதியோர் உதவித்தொகை, ஆதரவற்ற திருநங்கைகளுக்குகான ஓய்வூதியத் தொகை, திருமணமாகாத ஏழைப் பெண்களுக்கு ஓய்வூதியத் தொகை, ஆதரவற்ற விதவைத் தாய்மார்களுக்கு உதவித்தொகை, கல்வி உதவித்தொகை ஆகிய உதவித்தொகைகளைப் பயனாளிகளுக்குத் தாமதமின்றி வழங்கவேண்டும்.

வருவாய்த் துறையின் மூலம் விரைவு பட்டா மாறுதல் வழங்கும் திட்டத்தின் கீழ் உட்பிரிவு பட்டா, உட்பிரிவு பட்டா மாறுதல்கள் வழங்குவதைக் காலதாமதமின்றி வழங்கவும், இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் பட்டாக்களைத் தகுதியான பயனாளிகளுக்கு வழங்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்'' என்று மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x