Published : 26 Nov 2020 05:04 PM
Last Updated : 26 Nov 2020 05:04 PM

தாம்பரம், முடிச்சூர் பகுதிகளில் காவல் ஆணையர் ஆய்வு: நிவாரணப் பொருட்களை வழங்கினார்

சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், தாம்பரம் கார்லே பள்ளி அரசு முகாம் மற்றும் முடிச்சூர் பகுதிகளுக்குச் சென்று மழைநீர் தேங்கியுள்ள இடங்களில் போலீஸார் மேற்கொள்ளும் நிவாரணப் பணிகளைப் பார்வையிட்டு பொதுமக்கள் தங்கியுள்ள அரசு முகாமில் உணவுப் பொட்டலங்களை வழங்கினார்.

இதுகுறித்து சென்னை காவல்துறை சார்பில் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

“வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக நிவர் புயல் உருவாகியுள்ளதால், சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் கடந்த 24.11.2020 முதல் தொடர் மழை பெய்து வருகிறது. பெரும்பாலான இடங்கள் மழைநீர் சூழ்ந்துள்ளதால் சென்னை போலீஸார் நிவாரணப் பணிகளில் ஈடுபட சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில், சட்டம், ஒழுங்கு மற்றும் போக்குவரத்து, காவல் அதிகாரிகள் தலைமையிலான காவல் குழுவினர் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீர் அகற்றப்படுவதற்கும், சாலைகளில் விழுந்த மரங்கள் அகற்றப்படுவதற்கும், போக்குவரத்து சீர் செய்யப்பட்டு வருவதுடன் பொதுமக்கள் பாதுகாப்புக்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், நிவர் புயல் தொடர்பாக பொதுமக்கள் அவசர உதவிக்கு காவல்துறையை எளிதில் அணுகும் வகையில், காவல் ஆணையரகத்தில் சிறப்புக் கட்டுப்பாட்டறை அமைக்கப்பட்டு (24/7), வாட்ஸ் அப் வசதியுடன் கூடிய 94981 81239 என்ற செல்போன் எண்ணும் அறிமுகப்படுத்தப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. புயல், மழை பாதிப்புகளைத் தொடர்ந்து கண்காணித்து மக்களுக்கு உதவிட பொதுமக்கள் தெரிவிக்கும் அவசர உதவிகளுக்கு உடனுக்குடன் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால், இன்று (26.11.2020) தாம்பரம் மற்றும் முடிச்சூர் ஏரிப் பகுதிகளுக்குச் சென்று மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணி மற்றும் சாலையில் விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணிகளைப் பார்வையிட்டு, காவல் துறையின் மீட்புப்பணி, பொதுமக்களுக்கான உதவிகள் பற்றி காவல் அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கினார்.

மேலும் சேலையூர், லஷ்மி நகர், IAF, அஷ்டலஷ்மி நகர் பகுதிகளில் நீர் சூழ்ந்து பாதிக்கப்பட்டவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள தாம்பரம், கார்லே பள்ளியில் உள்ள அரசு முகாமிற்குச் சென்று அங்கு தங்கியுள்ள பொதுமக்களைப் பார்வையிட்டு அவர்களுக்கு உணவு, பன் மற்றும் குடிநீர் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.

பொதுமக்கள் பாதுகாப்புக்காக தமிழக அரசின் வழிகாட்டுதலின் பேரில், சென்னை பெருநகர காவல்துறை மற்றும் அரசுத் துறைகளுடன் ஒருங்கிணைந்து தொடர்ந்து மீட்புப் பணி மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறது. பொதுமக்கள் அவசர அழைப்புக்கு 24X7- மணி நேர அவசர உதவி எண் 94981 81239 என்ற கைப்பேசி எண்ணில் அழைத்தால் சென்னை பெருநகர காவல்துறை உடனிருந்து உதவிடுவோம்' என்று காவல் ஆணையர் தெரிவித்தார்”.

இவ்வாறு சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x