Published : 25 Nov 2020 10:39 PM
Last Updated : 25 Nov 2020 10:39 PM

நிவர் புயல் எதிரொலி: அமைதியாகக் காட்சியளிக்கும் ராமேசுவரம் கடல்  

ராமேசுவரம்

நிவர் புயல் கரையைக் கடக்க உள்ள நிலையில் தனுஷ்கோடி, ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் கடல், அலைகளின் எழுச்சியின்றி அமைதியாக காணப்பட்டது.

வங்காள விரிகுடாவில் ஆழ்ந்த காற்றழுத்தம், ‘நிவர்’ புயலாக தீவிரமடைந்து தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் புயல் அதி தீவிரப் புயலாக வலுப்பெற்று காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் புதன்கிழமை இரவு கரையைக் கடக்கக்கூடும்.

இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்து வரும் 2 தினங்களுக்கு பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

புயலினால் பலத்த காற்றானது மணிக்கு 130 முதல் 140 கி.மீ வேகத்திலும், சமயத்தில் 155 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் எனவும் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் கடலுக்குள் செல்லவேண்டாம் எனவும் மறுஅறிவிப்பு வரும்வரையிலும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் எப்போதும் அலைகள் சீற்றத்துடன் காணப்படும் ராமேசுவரம் கடற்கரை பகுதி வானிலை எச்சரிக்கைக்கு மாறாக நிவர் புயல் கரையை கடக்க உள்ள நிலையில் இன்று (புதன்கிழமை) தனுஷ்கோடி, ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் கடல், அலைகளின் எழுச்சியின்றி அமைதியாக குளம் போலக் காணப்பட்டது.

ஆனாலும் முன்னெச்சரிக்கையாக பாம்பன் மற்றும் மண்டபம் மீனவர்கள் தங்களின் விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகளை பாக்ஜலசந்தி கடற்பகுதியிலிருந்து மன்னார் வளைகுடா கடற்பகுதிக்கு மாற்றினர். மேலும் ராமேசுவரத்திலிருந்து சென்னைக்குச் செல்லும் சேது எக்ஸ்பிரஸ் ரயிலும் ரத்து செய்யப்ட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x