Published : 25 Nov 2020 09:59 PM
Last Updated : 25 Nov 2020 09:59 PM

நிவர் புயல் இரவு 10.30 மணி அளவில் புதுச்சேரி அருகே கரையைக் கடக்க வாய்ப்பு

கடலூர், புதுவை அருகே நெருங்கி வரும் அதி தீவிர நிவர் புயல் இன்று இரவு 10.30 மணி அளவில் புதுச்சேரி அருகே கரையைக் கடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தீவிரப் புயலாக (severe cyclonic storm) இருந்த நிவர், அதி தீவிரப் புயலாக (Very Severe Cyclonic Storm) வலுப்பெற்றுள்ளது. இது தற்போது தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் புதுச்சேரிக்கு கிழக்கே தென்கிழக்கே சுமார் 85 கி.மீ. தொலைவிலும், சென்னையிலிருந்து 160 கி.மீ. தொலைவிலும், கடலூருக்குத் தென்கிழக்கே சுமார் 80 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

இது வடமேற்கு திசையில் நகர்ந்து காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் இன்று (நவ.25) இரவு 10.30 மணி அளவில் அதி தீவிரப் புயலாகக் கரையைக் கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது புயலின் வேகம் 14 கி.மீ. வேகத்தில் உள்ளது.

இதன் காரணமாக ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும். ஒருசில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும்.

கரையைக் கடக்கும் சமயத்தில் பலத்த காற்றானது புதுவை, காரைக்கால், நாகை, கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மணிக்கு 130 முதல் 140 கி.மீ. வேகத்திலும், சமயத்தில் 155 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

திருவாரூர், காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த காற்று மணிக்கு 80 முதல் 90 கி.மீ. வேகத்தில் வீசும். சமயங்களில் 100 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x