Last Updated : 25 Nov, 2020 07:48 PM

 

Published : 25 Nov 2020 07:48 PM
Last Updated : 25 Nov 2020 07:48 PM

பாகிஸ்தானில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு கடத்த முயற்சி: தூத்துக்குடி அருகே படகில் 100 கிலோ ஹெராயின் பறிமுதல்- இலங்கையைச் சேர்ந்த 6 பேரிடம் தீவிர விசாரணை

தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே இலங்கைக்கு சொந்தமான படகில் கடத்தப்பட்ட 100 கிலோ ஹெராயின் உள்ளிட்ட போதைப் பொருட்கள் மற்றும் 5 துப்பாக்கிகளை இந்திய கடலோர காவல் படையினர் இன்று பறிமுதல் செய்தனர்.

இந்த போதைப் பொருள் பாகிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்டுள்ளது. படகில் இருந்த இலங்கையை சேர்ந்த 6 பேரிடம் கடலோர காவல் படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடியில் உள்ள இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான 'வைபவ்' என்ற ரோந்து கப்பலில் கடலோர காவல் படையினர் இன்று மன்னார் வளைகுடா கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது தூத்துக்குடிக்கு தெற்கு சர்வதேச கடல் எல்லையையொட்டிய இந்திய கடல் பகுதிக்குள் இலங்கையை சேர்ந்த படகு ஒன்று சந்தேகமான வகையில் சென்று கொண்டிருந்ததை கடலோர காவல் படையினர் கண்டனர். உடனே அந்த படகை கடலோர காவல் படையினர் மடக்கி பிடித்து சோதனை நடத்தினர்.

அப்போது அந்த படகில் இருந்த காலியான டீசல் டேங்க் ஒன்றியில் போதைப் பொருள் குவியல் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. 99 பாக்கெட்டுகளில் சுமார் 100 கிலோ எடையுள்ள ஹெராயின் மற்றும் 20 சிறிய பெட்டிகளில் சிந்தட்டிக் போதை பொருட்கள் இருந்தன.

மேலும், 9 எம்எம் அளவுள்ள 5 பிஸ்டல் துப்பாக்கிகளும், ஒரு 'துரயா' வகை சேட்டிலைட் போனும் இருந்தன. இவைகளின் மதிப்பு சுமார் ரூ.500 கோடி வரை இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

படகுடன் போதைப் பொருட்கள் மற்றும் துப்பாக்கிகளை பறிமுதல் செய்த கடலோர காவல் படையினர், இந்த படகில் இருந்த இலங்கையை சேர்ந்த 6 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் இந்த போதை பொருட்கள் பாகிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.

பாகிஸ்தானின் கராச்சி பகுதியில் இருந்து பாய்மரப் படகு மூலம் இந்த போதைப் பொருள் கடத்திவரப்பட்டு, நடுக்கடலில் வைத்து இலங்கை படகுக்கு மாற்றப்பட்டுள்ளது.

கடந்த 17-ம் தேதி கராச்சியில் இருந்து போதைப் பொருட்களுடன் அந்த பாய்மரப்படகு கிளம்பி வந்துள்ளது. கடல் சீற்றம் காரணமாக 9 நாட்களுக்கு பிறகு போதைப் பொருட்கள் தூத்துக்குடி கடல் பகுதிக்கு வந்துள்ளது.

இந்த போதைப் பொருட்கள் மேற்கத்திய நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு கடத்தி செல்வதற்காக கொண்டுவரப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட 6 பேரையும், பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களையும் இந்திய கடலோர காவல் படையினர் தூத்துக்குடிக்கு கொண்டு வந்து கொண்டிருக்கின்றனர்.

தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களிடம் மத்திய, மாநில உளவுப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தவுள்ளனர். அதன் பிறகே இந்த போதைப் பொருள் கடத்தல் தொடர்பான முழு விபரங்களும், பின்னணி தகவல்களும் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x