Last Updated : 25 Nov, 2020 06:29 PM

 

Published : 25 Nov 2020 06:29 PM
Last Updated : 25 Nov 2020 06:29 PM

காளையார்கோவில் அருகே மாவட்ட ஆட்சியர் காரை மறித்து புகார் தெரிவித்த கிராமமக்கள்

சிவகங்கை

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி காரை மறித்து வரத்துக்கால்வாய் ஆக்கிரமிப்பு குறித்து புகார் தெரிவித்தனர்.

காளையார்கோவில் அருகே காஞ்சிப்பட்டி ஊராட்சி ஒருப்போக்கி கிராமத்தில் கண்மாயில் உடைப்பு ஏற்பட்டது. அதனை ஊரகவளர்ச்சி, வருவாய்த்துறை அதிகாரிகள் சரி செய்து வருகின்றனர். அதனை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு, அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

தொடர்ந்து அவர் மறவமங்கலம் பகுதியில் சென்றபோது கிராமமக்கள் அவரது காரை மறித்து வரத்துக்கால்வாய் ஆக்கிரமிப்பு குறித்து புகார் தெரிவித்தனர்.

கிராமமக்கள் கூறுகையில், ‘ பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள மறவமங்கலம் பெரிய கண்மாய் மூலம் ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. சமீபத்தில் குடிமராமத்து திட்டத்தில் கண்மாய் சீரமைக்கப்பட்டது. ஆனால் வரத்துக்கால்வாயை சீரமைக்கவில்லை. வரத்துக்கால்வாயில் ஆக்கிரமிப்பில் உள்ளதால் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது.

மேலும் நாச்சியார்ரேந்தல், சூரன்குண்டு கண்மாய்கள் மூலம் 200 ஏக்கருக்கு மேல் பாசன வசதி பெறுகின்றன. இந்த கண்மாய்களில் உள்ள 5 மடைகளும் சேதமடைந்துள்ளதால், தண்ணீர் தேங்காமல் வெளியேறி வருகிறது.

இதனால் சாகுபடி செய்ய முடியாதநிலை உள்ளது. மேலும் இக்கண்மாய்களுக்குரிய வரத்துக்கால்வாய்களும் ஆக்கிரமிப்பில் உள்ளன. இதனால் வரத்துக்கால்வாய், மடைகளை சீரமைக்க வேண்டும், என்று கூறினர்.

இதையடுத்து கிராமமக்களின் புகாரை நிவர்த்தி செய்ய பொதுப்பணி மற்றும் ஊரகவளர்ச்சித்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x