Published : 25 Nov 2020 06:28 PM
Last Updated : 25 Nov 2020 06:28 PM

கனமழை, நீர்வரத்து அதிகரிப்பு; செம்பரம்பாக்கம் நீர் திறப்பு 5000 கன அடியாக உயர்த்தப்பட்டது: அடையாறு ஆற்றில் கரை புரண்டோடும் வெள்ளம்

சென்னை

கனமழை காரணமாக நிரம்பியுள்ள செம்பரம்பாக்கம் ஏரிக்கு வேகமாக நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில், அதிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு 5000 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த 2015-ம் ஆண்டு பெய்த பெருமழை மற்றும் செம்பரம்பாக்கம் ஏரியை ஒட்டியிருந்த பகுதிகளில் பெய்த 20 செ.மீ. மழை, நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக திடீரென செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து அதிக அளவிலான நீர் திறக்கப்பட்டதால் சென்னையில் பெருவெள்ளம் சூழ்ந்தது.

வீடுகளில் சூழ்ந்த பெருவெள்ளம், உடமைகள் இழப்பு, பலருக்கு தங்கள் வாழ்நாள் சேமிப்பெல்லாம் இழக்கும் நிலை, உயிரிழப்பு என சென்னையின் வரலாற்றில் மிகுந்த பேரிடராக அமைந்தது. அதன் துக்கச் சுவடுகளை சென்னை மக்கள் யாரும் மறக்கவில்லை. அதன் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் மழை, புயல் என வரும்போது சென்னை மற்றும் புறநகர் மாவட்ட மக்கள் மிகுந்த கவலையுடனே பார்ப்பார்கள்.

இந்நிலையில் 5 ஆண்டுகள் கழித்து அதேபோன்று கனமழை, நிவர் புயல் காரணமாக சென்னைக்கு ஏற்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பெய்யும் கனமழை மற்றும் புயல் கரையைக் கடக்காத நிலை பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியும் அதன் முழுக் கொள்ளளவை எட்டி வருகிறது.

24 அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரி தற்போது 22 அடியைத் தொட்டுவிட்டது. இன்று காலை விநாடிக்கு 4000 கன அடி நீர் வருவதாகப் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை மத்திய ஜல்சக்தி அமைச்சகம் செம்பரம்பாக்கம் ஏரி குறித்த தகவலைக் கேட்டது.

இந்நிலையில் கனமழை நீர்வரத்து காரணமாக இன்று பிற்பகலிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவை படிப்படியாக அதிகரித்து வருகின்றனர். தற்போது வெளியேற்றப்படும் நீரின் அளவு 5000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அடையாறு ஆற்றில் வெள்ளம் கரை புரண்டோடுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x