Published : 25 Nov 2020 02:54 PM
Last Updated : 25 Nov 2020 02:54 PM

நிவர் புயல்; கணிதம், வேதியியல் பாடங்களுக்கான தேசிய தகுதித் தேர்வை மாற்றுத் தேதியில் நடத்த வேண்டும்: வைகோ

வைகோ: கோப்புப்படம்

சென்னை

கணிதம், வேதியியல் பாடப்பிரிவுகளுக்கான தேசிய தகுதித் தேர்வை மாற்றுத் தேதியில் நடத்த வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, வைகோ இன்று (நவ. 25) வெளியிட்ட அறிக்கை:

"அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மையம் (Council of Scientific and Industrial Research University Grants Commission) சார்பில், கணிதம் மற்றும் வேதியியல் பாடப்பிரிவுகளுக்கு நாளை (நவ.26) தேசிய தகுதித் தேர்வு (CSIR - NET) நடைபெற உள்ளது.

இந்த ஆண்டுக்கான தேசிய தகுதித் தேர்வை நவம்பர் 19, 21, 26 ஆகிய தேதிகளில் நடத்த இந்திய தேர்வு முகமை திட்டமிட்டு இருந்தது. திட்டமிட்டபடி நவம்பர் 19, 21 ஆகிய தேதிகளில் தேர்வுகள் நடைபெற்று முடிந்த நிலையில், நிவர் புயல் காரணமாக நாளை நடைபெற உள்ள தேர்வை தமிழக மாணவர்கள் எதிர்கொள்வதில் சிக்கல் எழுந்துள்ளது.

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு பேருந்து, ரயில் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்துகளைத் தடை செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக, உரிய நேரத்தில் மாணவர்கள் தேர்வு மையங்களைச் சென்றடைய முடியாது.

கல்லூரிகளில் விரிவுரையாளர்களாகப் பணிபுரிவதற்கான தகுதித் தேர்வாகவும், முனைவர் பட்ட ஆய்வு மாணவராகப் பதிவு செய்வதற்கான தகுதித் தேர்வாகவும், இளநிலை ஆய்வாளர் உதவித்தொகை பெறுவதற்கான தகுதித் தேர்வாகவும் இந்தத் தேர்வு அமைந்திருப்பதால் முக்கியத்துவம் வாய்ந்த தேர்வாகக் கருத வேண்டியுள்ளது.

நிவர் புயல் காரணமாக, நாளை நடைபெற உள்ள தேசிய தகுதித் தேர்வை தமிழக மாணவர்களால் எழுத இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஆகவே, தமிழக மாணவர்களின் நலன் கருதி, தமிழக அரசு தேசிய தேர்வு முகமையுடன் கலந்தாலோசித்து உடனடியாக மாற்றுத் தேதியில் தேர்வு நடத்திட துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்".

இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x