Last Updated : 12 Oct, 2015 10:02 AM

 

Published : 12 Oct 2015 10:02 AM
Last Updated : 12 Oct 2015 10:02 AM

பழவேற்காடு ஏரியில் குவியும் பறவைகள்: பொன்னேரி அருகே ஒரு வேடந்தாங்கல்

பழவேற்காடு ஏரியில், வெளி நாட்டு மற்றும் உள்நாட்டுப் பறவைகள் ஆயிரக்கணக்கில் குவியத் தொடங்கியுள்ளன. பூ நாரை, வர்ண நாரைகள் உள்ளிட்ட பறவைகளை பார்க்க ஏராளமானோர் வருகின்றனர்.

பொன்னேரியை அடுத்துள்ளது பழவேற்காடு ஏரி. தமிழகம் மற்றும் ஆந்திர பகுதிகளில், 481 சதுர கிமீ பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஏரி, இந்தியாவின் இரண்டாவது பெரிய உப்பு நீர் ஏரி என்ற சிறப்பை பெற்றது. வங்காள விரிகுடா கடலின் முகத்துவாரமாக விளங்கும் பழவேற்காடு ஏரியில், பங்கிங்காம் கால்வாய் நீரும், கடல் நீரும் கலக்கும் ஏரியாக திகழ்கிறது. இந்த ஏரி மீன் வளம் மிகுந்தது. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான பறவைகள் இங்கு வருகின்றன. இதனால் இந்த ஏரி பறவைகள் காப்பகமாக விளங்குகிறது.

இந்நிலையில், தற்போது சீசன் என்பதால் இரைக்காவும் இனப்பெருக்கத்துக்காகவும் வெளிநாடு மற்றும் உள்நாட்டு பறவைகள் ஆயிரக்கணக்கில் பழவேற்காடு ஏரியில் தற்போது குவியத் தொடங்கியுள்ளன. பழவேற்காடு, அண்ணாமலைச்சேரி, அவுரிவாக்கம் ஆகிய மீனவ கிராமங்களை ஒட்டியுள்ள ஏரிப்பகுதியில் அவை அதிகளவில் குவிந்து வருகின்றன. ஏரிக்கரைகளை ஒட்டியுள்ள நூற்றுக்கணக்கான கருவேல மரங்கள், பனை மரங்கள், அத்தி மற்றும் ஆலமரங்கள் உள்ளிட்டவற்றில் கூடு கட்டியுள்ளன.

சைபீரியா, ஆஸ்திரேலியாவின் பிளமிங்கோ என்கிற பூ நாரை, இந்தியாவின் வர்ண நாரை, கூழைகடா, நீர் காகம் உள்ளிட்ட நீர்ப்பறவைகளும், வயல் வெளி பறவைகளான நத்தை கொத்தி நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன், உள்ளான், வெள்ளை கொக்கு உள்ளிட்ட பறவைகள், ஆயிரக்கணக்கில் பழவேற்காடு ஏரியில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக குவிந்து வருகின்றன. இந்த எண்ணிக்கை அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிக்கும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவை வேட்டையாடப்படாமல் தடுக்க கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை இப்பறவைகள் இங்கு வசிக்கும். பின்னர் தாய்நாடுகளுக்கு குஞ்சுகளுடன் பறந்து செல்லும். பறவைகளின் வரத்தால் அப்பகுதி சுற்றுலா பிரதேசமாக மாறியுள்ளது. தினந்தோறும் ஏராளமானோர் பறவைகளை பார்க்க வருகின்றனர்.

பழவேற்காடு ஏரியில், பூ நாரை, வர்ண நாரைகள் உள்ளிட்ட வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுப் பறவைகள் ஆயிரக்கணக்கில் குவியத் தொடங்கியுள்ளன. பறவைகளை பார்க்க ஏராளமானோர் வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x