Published : 25 Nov 2020 03:14 AM
Last Updated : 25 Nov 2020 03:14 AM
கல் குத்துவிளக்கு பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், பூம்புகார் மையத்தில் விற்பனை வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும் என தயாரிப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வீடுகளில் மண்ணால் ஆன தீப விளக்குகள், எளிதில் உடையாத வெள்ளி, தங்க முலாம் பூசப்பட்ட உலோகத்தால் செய்யப்பட்ட குத்து விளக்குகள் பொதுமக்களால் பயன்படுத்தப்பட்டுவருகின்றன. பல ஆண்டுகளுக்கு முன்பு, கற்களால் தயாரிக்கப்பட்ட குத்து விளக்குகள் பயன்படுத்தப்பட்டன கோயில்களில் கொடிமரம் அருகே, வளாகத்தின் பல்வேறு இடங்களில் கல் குத்துவிளக்குகள் வைக்கப்பட்டு தீபம் ஏற்றப்படுகிறது. காலப் போக்கில், இந்த குத்துவிளக்குகளின் பயன்பாடு மக்களிடம் குறைந்துவிட்டது.
தற்போது, கல் குத்துவிளக்குகளின் பயன்பாடு மீண்டும் பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. பெரிய நிறுவனங்கள், வர்த்தக மையங்கள், ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள் கட்டுபவர்கள், கட்டிடத்தின் முகப்புப் பகுதியில் அலங்காரத்துக்காகவும், வழிபாட்டுக்காகவும் கல் குத்துவிளக்குகளை பிரத்யேகமாக செய்து வாங்குகின்றனர். கார்த்திகை தீபம் போன்ற பண்டிகை மாதங்களில் சிறிய அளவிலான கற்களால் செய்யப்பட்ட விளக்குகளை பொதுமக்கள் வாங்கி பயன்படுத்துவதும் அதிகரித்துள்ளது.
இதுதொடர்பாக, கோவை சங்கனூரில் கல் குத்துவிளக்கு தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள மகேஸ்வரன் கூறும்போது, ‘‘கல் குத்துவிளக்கு தயாரிப்பு என்பது ஒரு கலை. விளக்கின் அடிப்பகுதியில் பீடம், அதன் மேல் தண்டு, அதன் மேல் தட்டு, இறுதியாக தலைப் பகுதியில் கிரீடம் ஆகியவை கல் குத்துவிளக்கின் முக்கிய அம்சங்கள். இவை தனித்தனியாக தயாரிக்கப்பட்டு ஒன்றாக இணைக்கப்படுகின்றன. ஊத்துக்குளி, வாரிக்கோட்டை, இடையர்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து எடுக்கப்படும் பாறைகளை, பட்டறையில் கொத்தி, செதுக்கி, லேத்தில் கடைந்து கல் குத்து விளக்குகள் தயாரிக்கப்படுகின்றன. ஒரு கல் குத்துவிளக்கு தயாரிக்க குறைந்தபட்சம் 2 நாட்கள் ஆகிவிடும்.
ஒரு அடி முதல் பனிரென்டரை அடி வரை பல்வேறு உயர அளவுகளில் கல் குத்து விளக்குகள் உள்ளன. குறைந்தபட்சம் ஒரு தட்டு முதல் அதிகபட்சம் 7 தட்டுகள் வரை பொருத்தப்பட்டிருக்கும். 60 கிலோ எடை கொண்ட சிறிய விளக்கின் விலை ரூ.2500 முதல் கிடைக்கும். கோவையில் சங்கனூர், சுந்தராபுரம், காரமடை ஆகிய இடங்களில் கல் குத்துவிளக்கு தயாரிக்கும் மையங்கள் உள்ளன. பொதுமக்கள் சிறிய கல் குத்து விளக்குகளையும், நிறுவனங்கள் பெரிய விளக்குகளையும் வாங்கிச் செல்கின்றனர். அரசு கைவினைப் பொருள் விற்பனையகமான பூம்புகார் மையங்களில் எங்களை போன்ற சிறு தயாரிப்பாளர்கள், தயாரிக்கும் கல் குத்து விளக்குகளை வாங்கி வியாபாரம் செய்தால், எங்களது பொருளாதார தேவை நிவர்த்தியடையும். அரசு இதற்கு உதவ வேண்டும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT