Published : 24 Oct 2015 11:37 AM
Last Updated : 24 Oct 2015 11:37 AM

கரூரில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க ரூ.229 கோடி நிதி ஒதுக்கீடு: முதல்வர் உத்தரவு

கரூரில் புதிய மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கான கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய கட்டடம் கட்டுதல் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைப்பதற்காக 229 கோடியே 46 லட்சம் ரூபாய்க்கு நிர்வாக ஒப்புதல் மற்றும் நிதி ஒப்பளிப்பு வழங்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக் குறிப்பில், "மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களைத் திறம்பட செயல்படுத்துவதற்கு அரசு மற்றும் தனியார் துறைகளில் போதுமான தகுதி வாய்ந்த மருத்துவர்கள் அவசியம் ஆகும்.

எனவே, தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மருத்துவக் கல்லூரி துவங்கப்படவேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில், ஆண்டிற்கு ஒன்று என மருத்துவக் கல்லூரிகளை தமிழக அரசு ஏற்படுத்தி வருகிறது.

அதன் அடிப்படையில் 2012-13-ஆம் கல்வியாண்டில் சிவகங்கையிலும், 2013-14-ஆம் கல்வியாண்டில் திருவண்ணாமலையிலும், இந்த ஆண்டு சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்திலும் தலா 100 மாணாக்கர்கள் சேர்க்கையுடன் மூன்று மருத்துவக் கல்லூரிகள் அரசால் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

மேலும், கடந்த நான்கு ஆண்டுகளில், ஏழு அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக 410 மருத்துவ பட்டப்படிப்பு இடங்களுக்கு இந்திய மருத்துவக் குழுமத்தின் அனுமதியும் பெறப்பட்டுள்ளது.

இதனால் 2011-12-ஆம் ஆண்டில் 1,945 ஆக இருந்த மருத்துவ பட்டப் படிப்பு இடங்கள், 2015-16-ஆம் ஆண்டில் 2,655-ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் கடந்த நான்கு ஆண்டுகளில் 710 இடங்கள் அதிகமாக உருவாக்கப்பட்டுள்ளன.

சென்ற ஆண்டு சட்டப்பேரவை கூட்டத் தொடரில் கரூரில் 150 மருத்துவ மாணாக்கர் சேர்க்கையுடன் ஒரு புதிய அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

இதன் அடிப்படையில் கரூரில் புதிய மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கான கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய கட்டடம் கட்டுதல் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைப்பதற்காக 229 கோடியே 46 லட்சம் ரூபாய்க்கு நிர்வாக ஒப்புதல் மற்றும் நிதி ஒப்பளிப்பு வழங்கி முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இது தவிர, புதுக்கோட்டையில் ஒரு புதிய அரசு மருத்துவக் கல்லூரி 150 மாணாக்கர் சேர்க்கையுடன் அமைக்கப்படும் என்று முதல்வர் கடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் அறிவித்தார்கள். அதன் அடிப்படையில், புதுக்கோட்டையில் புதியதாக ஒரு மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கான ஒப்புதலை முதல்வர் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், ஆயத்தப் பணிகளுக்காக ஒரு சிறப்பு அலுவலர் / முதல்வர் பணியிடத்தினை உருவாக்கி முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இம்மருத்துவக் கல்லூரி சுமார் 200 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x