

தனியார் கல்லூரியில் மருத்துவம் பயில வாய்ப்பு கிடைத்த கள்ளக்குறிச்சி மாவட்ட அரசுப் பள்ளி மாணவியர் இருவர், போதுமான நிதி ஆதாரம் இல்லாததால், மருத்துவம் பயில முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும், தற்போது அரசு அறிவித்த கட்டணச் சலுகையுடன் வாய்ப்பு கிடைக்குமா என்ற ஏக்கத்திலும் தவித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியில் பயின்ற செவ்வந்தி மற்றும் கிருஷ்ணவேணி இருவருக்கும் அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மருத்துவம் பயிலத் தகுதி பெற்றனர்.
இதையடுத்து, சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்ற மருத்துவக் கலந்தாய்வில் நவம்பர் 19-ம் தேதி பங்கேற்றனர். அப்போது, அவர்களுக்குத் தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கைக்கான வாய்ப்பு கிடைத்ததாகவும், எனவே, தனியார் கல்லூரியில் கட்டணம் செலுத்தும் அளவுக்குத் தங்களின் குடும்பச் சூழல் இல்லை எனக் கூறி சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளனர்.
சொந்த ஊருக்குத் திரும்பிய போதுதான், அரசு அறிவித்த அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் கட்டணச் சலுகைக் குறித்த விவரம் தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவர்கள் என்ன செய்வது எனத் தெரியாமல், தாங்கள் பயின்ற பள்ளியின் ஆசிரியரிடம் கூறியுள்ளனர். அவர் விசாரித்துவிட்டு, தற்போது மீண்டும் சேர்க்கை கிடைக்க வாய்ப்பில்லை எனவும், அடுத்த ஆண்டு தேர்வுக்குத் தயாராகுங்கள் என்றும் கூறியுள்ளார்.
இதுகுறித்துத் தகவலறிந்து, கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் மாணவியர் நிலை குறித்துப் பேசியபோது, வாய்ப்பு இருக்கிறதா என்பது தொடர்பாக மருத்துவக் கவுன்சிலில் கலந்தாலோசித்துவிட்டுத் தகவல் தெரிவிப்பதாகக் கூறினர்.
இது தொடர்பாக அரசுப் பள்ளி பாதுகாப்பு மேடை அமைப்பின் தலைவர் க.திருப்பதி கூறுகையில், "மாணவியரின் குடும்பச் சூழல் ஏழ்மை நிறைந்தது. ஒருவர் நெசவாளர் குடும்பத்தைச் சேர்ந்தவர். மற்றொருவர் கட்டுமானத் தொழிலாளியின் மகள். இருவருக்கும் மருத்துவம் பயில வாய்ப்பு கிடைத்த நிலையில், அரசின் தாமதமான அறிவிப்பால் அவர்களுக்குக் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத நிலை உள்ளது.
இவர்கள் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் ஏராளமானர் இதுபோன்று பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அரசு, இவர்களைப் போன்றவர்களுக்கு மீண்டும் கலந்தாய்வு நடத்துவது தொடர்பாக முறையான அறிவிப்பு செய்து, அவர்களின் மருத்துவக் கனவை நனவாக்க வேண்டும்" என்றார்.