Last Updated : 24 Nov, 2020 05:36 PM

 

Published : 24 Nov 2020 05:36 PM
Last Updated : 24 Nov 2020 05:36 PM

புயல் அச்சம்: படகுகளை வீட்டருகே தெருக்களில் நிறுத்தி பத்திரப்படுத்திய புதுச்சேரி மீனவர்கள்

நல்லவாடு கிராமத்தில் தெருக்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகள்.

புதுச்சேரி

புயல் அச்சத்தால் பைபர் படகுகளைப் பாதுகாப்புடன் நிறுத்த வழியில்லாததால் தங்கள் வீடுகளுக்கு அருகே டிராக்டரில் எடுத்துச் சென்று தெருக்களில் புதுச்சேரி மீனவர்கள் பத்திரப்படுத்தியுள்ளனர். இதனால் தெருவெங்கும் படகுகள் நிறுத்தப்பட்டுள்ளன.

வங்கக் கடலில் புதிதாக உருவாகியுள்ள நிவர் புயல் காரணமாக புதுச்சேரியில் கனமழை பெய்து வருகிறது. புதுச்சேரியில் 7-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணத்தில் இருந்து பேரிடர் மீட்புக் குழுவினர் புதுச்சேரிக்கு வந்துள்ளனர். இதனால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, புதுச்சேரி துறைமுகப் பகுதியில் ஏராளமான விசைப்படகுகள் பாதுகாப்பாகத் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், பைபர், கட்டுமரங்களை நிறுத்த இங்கு வசதியில்லை. அதனால் அந்தந்த மீனவ கிராமங்களிலேயே பாதுகாப்பாகப் படகுகளை நிறுத்தி வைத்துக்கொள்ள அரசு அறிவுறுத்தியுள்ளது.

கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. வழக்கமாக, 3 அடி அளவுக்கு அலைகள் வீசும். தற்போது அதன் அளவு பல மடங்கு அதிகரித்துள்ளது. விசைப்படகுகள் போல் பைபர், கட்டுமரங்களை நிறுத்த வசதியில்லை.

மீனவ கிராமமான நல்லவாடு கிராம மீனவர்கள் தங்கள் படகுகளைக் காக்க புது முயற்சியை எடுத்துள்ளனர். கடலில் இருந்து டிராக்டர் மூலம் படகுகளை இழுத்து ஏற்றி தாங்கள் வசிக்கும் தெருக்களிலும், வீடுகளை ஒட்டியுள்ள பகுதிகளிலும், தோப்புகளிலும் நிறுத்தி கயிறு மூலம் கட்டி வைத்துள்ளனர்.

மீனவர்களிடம் கேட்டதற்கு, "பேரிடர் காலத்தில் படகுகளைப் பாதுகாக்க அரசு எவ்வித உதவியும் செய்வதில்லை. எங்கள் படகை நாங்கள்தான் பாதுகாக்க வேண்டும். மீண்டும் செலவு செய்யவோ, வாங்கவோ வசதியில்லை. அதனால் அதைப் பாதுகாப்புடன் எங்கள் தெருக்களிலோ, வீடுகளை ஒட்டியுள்ள பகுதிகளிலோ கொண்டு வைத்து பத்திரப்படுத்துகிறோம். எங்கள் படகுகளைப் பாதுகாக்க மையங்கள் இல்லை. நாங்கள் படகுகளை நம்பித்தான் வாழ்வை நடத்துகிறோம். அதனால் படகுகள், வலைகளைப் பாதுகாக்க மையங்கள் தேவை" என வலியுறுத்துகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x