அமைச்சர் ஷாஜகான்: கோப்புப்படம்
அமைச்சர் ஷாஜகான்: கோப்புப்படம்

கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற காரைக்கால் மீனவர்கள் 30 பேர் குறித்த தகவல் தெரியவில்லை: கடலோரக் காவல்படை உதவியை நாடியுள்ளதாக அமைச்சர் தகவல்

Published on

கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற காரைக்கால் மீனவர்கள் 30 பேரின் தகவல் தெரியவில்லை, கடலோரக் காவல்படை உதவியை நாடியுள்ளோம் என்று புதுச்சேரி வருவாய்த்துறை அமைச்சர் ஷாஜகான் தெரிவித்தார்.

நிவர் புயல் நாளை காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. புயலை எதிர்கொள்ள புதுச்சேரி அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. புயல் கரையை கடக்கும் தினமான நாளை (நவ. 25) அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, புதுவை வருவாய்த்துறை அமைச்சர் ஷாஜகான் கூறியதாவது:

"புதுவையில் நாளை மதியம் 1.30 மணியளவில் நிவர் புயல் கரையை கடக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. அரசு துறைகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து செயல்பட முடுக்கிவிட்டுள்ளோம். புயலை வேடிக்கை பார்க்க கடற்கரைக்கு யாரும் வரக்கூடாது. மரம், மின்கம்பங்கள் காற்றில் சாய்வதற்கு வாய்ப்புள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். நாளை பேருந்துகள் இயக்கப்படாது.

கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் திரும்ப அழைக்கப்பட்டனர். புதுவையிலிருந்து சென்றவர்கள் அனைவரும் திரும்பிவிட்டனர். காரைக்காலில் 83 படகுகளில் மீன்பிடிக்க சென்றவர்களில் 10 பேர் திரும்பியுள்ளனர். 48 பேர் கோடியக்கரையிலும், 5 பேர் ஆந்திராவிலும் பாதுகாப்பாக உள்ளனர். மீதமுள்ள 30 பேரை பற்றி தகவல் இல்லை. கடலோர பாதுகாப்புப் படைக்குத் தகவல் தெரிவித்து அவர்களை பாதுகாப்பாக அழைத்துவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். புயல் கரையை கடக்கும் முன்பு அவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்படுவர் என்று நம்புகிறோம்.

புதுச்சேரியில் நாளை அரசு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. புதுவையில் 196 நிவாரண முகாம்களும், காரைக்காலில் 50 முகாம்களும் அமைத்துள்ளோம். இங்கு தங்க வைக்கப்படுபவர்களுக்கு உணவு வழங்கப்படும்".

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in