

அரக்கோணத்திலிருந்து காரைக்காலுக்கு பேரிடர் மீட்புக் குழுவினர் இன்று வந்தனர்.
'நிவர்' புயல் நாளை (நவ.25) பிற்பகல் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே 120 கிலோ மீட்டர் வேகத்தில் கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. இதையடுத்து, புயலை எதிர்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை புதுச்சேரி அரசு விரைவாக மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், காரைக்கால் மாவட்டத்தில் மீட்புப் பணியில் ஈடுபடுவதற்காக அரக்கோணத்திலிருந்து யோகேஷ் வாம்னாகர், மோகனரங்கம் ஆகியோர் தலைமையில் 20 பேர் கொண்ட பேரிடர் மீட்புக் குழுவினர் இன்று காரைக்கால் வந்தனர்.
இவர்கள், காரைக்கால் மாவட்ட பேரிடர் மேலாண்மை துறையினர், காவல் துறையினருடன் இணைந்து பட்டினச்சேரி மீனவக் கிராமத்தில் கரோனா பேரிடர் சூழலில் மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்தும், புயல் சூழலில் பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மரங்கள் விழுந்தால் அதனை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட மீட்புப் பணிகளை மேற்கொள்ளும் வகையில், தேவையான கருவிகளுடன் தயார் நிலையில் வந்துள்ளதாக பேரிடர் மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.