Published : 24 Nov 2020 02:28 PM
Last Updated : 24 Nov 2020 02:28 PM

7.5% இட ஒதுக்கீட்டை எதிர்த்து மனு; அவசர வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு: மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்த வேண்டுமென்ற கோரிக்கையும் நிராகரிப்பு

கிராமப்புற ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கனவை நிறைவேற்றும் வகையில், அரசுப் பள்ளியில் படித்த கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் கொண்டுவரப்பட்ட 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்த மனுவை, அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்த வேண்டுமென்ற மனுதாரரின் கோரிக்கையையும் நிராகரித்துவிட்டது.

இந்தியாவிலேயே எந்த ஒரு மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் மருத்துவம், பல் மருத்துவம், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத்தில் இளங்கலைப் படிப்புகளில் அரசுப் பள்ளிகளில் பயிலும் கிராமப்புற ஏழை எளிய மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் கால அவகாசம் எடுத்துக் கொண்டதால், தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. பின்னர் ஆளுநரும் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார்.

இந்த 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் மூலம் தமிழகத்தைச் சேர்ந்த ஏறத்தாழ 313 மாணவர்கள் மருத்துவப் படிப்பிலும், 92 மாணவர்கள் பல் மருத்துவத்திலும் சேருவதற்கான வாய்ப்பினைப் பெற உள்ளனர். தற்போது, அதற்கான கவுன்சிலிங் நடைபெற்று வரும் நிலையில், கலந்தாய்வில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர இடம் கிடைக்கப் பெற்றும் கட்டணத்தின் காரணமாக மாணவர்கள் யாரும் சேரமுடியாத நிலை ஏற்படக் கூடாது என்பதற்காக உதவித்தொகை வரும் வரை காத்திருக்காமல், உடனடியாக அரசே அம்மாணவர்களின் கல்வி, விடுதிக் கட்டணம் போன்றவற்றைச் செலுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று (நவ. 24) காலை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்குவதற்கு முன்பான முறையீட்டு நேரத்தில் நீதிபதிகள் சத்திய நாராயணன், ஹேமலதா அடங்கிய அமர்வில், 7.5 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து மனுத்தாக்கல் செய்துள்ளதாகவும், அதனை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டுமென்றும், கவுன்சிலிங்குக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் வழக்கறிஞர் ஒருவர் சார்பில் முறையிடப்பட்டது

அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், மாணவர் சேர்க்கை நடந்து வரும் நிலையில், மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் இடையில் தலையிட்டு கவுன்சிலிங்கை நிறுத்த முடியாது என மறுப்பு தெரிவித்தனர்.

மனு உரிய நடைமுறைகளைப் பின்பற்றி, விசாரணைக்கு தங்கள் முன் பட்டியலிடப்படும் போது, விசாரிப்பதாக மனுதாரரிடம் நீதிபதிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x