Published : 24 Nov 2020 01:59 PM
Last Updated : 24 Nov 2020 01:59 PM

நிவர் புயல் நாளை மாலை புதுச்சேரி அருகே கரையைக் கடக்கும்: நிலப்பகுதியில் பலத்த காற்று; கடலோர மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

சென்னை

நிவர் புயல் நாளை மாலை புதுச்சேரி அருகே கரையைக் கடக்கும். நாளை மதியம் முதல் இரவு வரை 100 முதல் 120 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும். கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“நிவர் புயல் தற்போது தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் புதுச்சேரிக்கு கிழக்கே தென்கிழக்கே 410 கி.மீ. தொலைவிலும், சென்னையிலிருந்து 450 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. தற்போது அதன் நகரும் வேகம் குறைந்துள்ளது.

இது அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தீவிரப் புயலாக வலுப்பெறக்கூடும். இது வடமேற்கு திசையில் நகர்ந்து காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் நாளை மாலை தீவிரப் புயலாக கரையைக் கடக்கக்கூடும்.

இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் வரும் 27-ம் தேதி வரை மழை தொடரும். அடுத்துவரும் 24 மணி நேரத்தில் கடலோரப் பகுதிகளில் பெரும்பான்மையான இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்யக்கூடும்.

நாளை (நவ.25-ம் தேதி) கடலோரப் பகுதிகளில் பரவலாகவும், உள் மாவட்டங்களில் பெரும்பான்மையான இடங்களிலும் மழை பெய்யக்கூடும். கனமழையைப் பொறுத்தவரையில் அடுத்து வரும் 24 மணி நேரத்தில் காரைக்கால், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்யும்.

திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

நாளை புயல் கரையைக் கடக்கும் தினத்தில் 25-ம் தேதி புதுவை, கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், ஏனைய வட தமிழக மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும்.

நாகப்பட்டினம், காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர், புதுவை, விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்று மணிக்கு 100 முதல் 110 கி.மீ. வேகத்திலும், சமயத்தில் 120 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

திருவாரூர், காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த காற்று மணிக்கு 80 முதல் 90 கி.மீ. வேகத்திலும், சமயத்தில் 100 கி.மீ. வரை நாளை முற்பகல் முதல் இரவு வரையும் வீசக்கூடும்.

கடல் நிலையைப் பொறுத்தவரை நாளை இரவு வரை தமிழக கடற்கரையை ஒட்டியுள்ள கடல் கொந்தளிப்புடன் காணப்படும். கடல் அலைகள் இயல்பை விட 2 மீட்டர் உயரத்துக்கு எழும்பக்கூடும். ஆகவே, மீனவர்கள் நாளைவரை கடலுக்குச் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்தவரை மழை தொடரும். அடுத்து வரும் 2 தினங்களுக்கு கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

நேற்றிலிருந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நகர்வு 25 கி.மீ. வேகமாக இருந்தது. அதன் பின்னர் மாலைவரை மணிக்கு 11 கி.மீ. வேகத்திலும், அதன் பின்னர் 14 கி.மீ. வேகத்திலும், இரவு 4 கி.மீ. வேகத்திலும் நகர்ந்திருந்தது. தற்போது புயலின் நகர்வு நிலையாக உள்ளது. ஒவ்வொரு புயலும் வலுப்பெறும்போது அது நிலப்பகுதியுடன் தொடர்புகொள்ளும்போது அதன் நகர்வு குறைவாக இருக்கும்.

அது தீவிரப் புயலாக மாறும்போது வேகம்பெற்று நகரும். புயலின் நகரும் வேகத்துக்கும் திசை மாறுவதற்கும் சம்பந்தமில்லை. எந்தப் புயலும் ஒரே சீரான வேகத்துடன் நகராது. தற்போதைய கணிப்பைப் பொறுத்தவரை புதுச்சேரிக்கு அருகே நாளை மாலை புயல் கரையைக் கடக்கும்”.

இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x