Published : 24 Nov 2020 01:19 PM
Last Updated : 24 Nov 2020 01:19 PM

சட்டவிரோதக் கட்டுமானங்கள்; 2015-ம் ஆண்டு சம்பவத்துக்குப் பின்னும் பாடம் கற்கவில்லை: சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை 

சட்டவிரோதக் கட்டுமானங்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கத் தொடரப்பட்ட வழக்கில், சென்னை மாநகராட்சியில் நடவடிக்கை எடுக்காத போக்கு குறித்து அதிருப்தி தெரிவித்த உயர் நீதிமன்றம், 2015-ம் ஆண்டு பெருவெள்ளத்திலிருந்து பாடம் கற்கவில்லை என எச்சரித்து மாநகராட்சி ஆணையரை ஆஜராக உத்தரவிட்டது.

சட்டவிரோதக் கட்டுமானங்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுத்து, அதுகுறித்த அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ருக்மாங்கதன் பொதுநல மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அவரது மனுவில், “தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களின்படி 5-வது மண்டலமான ராயபுரத்தில் 5,674 விதிமீறல் கட்டிடங்கள் கண்டறியபட்டுள்ளன. 1,161 கட்டிடங்களைப் பொறுத்தவரை கட்டிடப் பணிகளை நிறுத்திவைத்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 679 வீடுகளுக்கு சீல் வைப்பது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 115 கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள விதிமீறல் கட்டிடங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சென்னை மாநகராட்சி அதிகாரிகள் குறிப்பிட்டுத் தேர்ந்தெடுத்த கட்டிடங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தபின் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன. சென்னை முழுவதும் 75 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை விதிமீறல் கட்டிடங்கள் இருக்கலாம்.

5-வது மண்டலத்தில் உள்ள 5,674 சட்டவிரோதக் கட்டுமானங்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கவும், அதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட வேண்டும்” எனக் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. சட்டவிரோதக் கட்டிடங்களுக்கு எதிராகப் பல்வேறு சட்டங்கள் உள்ளன. ஆனாலும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது தொடர்பாகத் தலைமைச் செயலாளர் மற்றும் நகராட்சி நிர்வாகத் துறை செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என எச்சரித்தனர்.

மேலும், சென்னையில் 5-வது மண்டலத்தில் மட்டும் இவ்வளவு விதிமீறல்கள் என்றால், தமிழகம் முழுவதும் இதே நிலைதான் இருக்கும் எனவும், உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் பல உத்தரவுகள் பிறப்பித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதையும், துறைத் தலைவர்கள் கண்காணிக்கத் தவறி விட்டதாகவும், 2015-ம் ஆண்டில் ஏற்பட்ட பெருவெள்ளத்திற்குப் பிறகும் பாடம் கற்கவில்லை என்றும் நீதிபதிகள் குற்றம் சாட்டினர்.

மேலும், ருக்மாங்கதன் வழக்குத் தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர், 5-வது மண்டல உதவி ஆணையர் ஆகியோர் ஆஜராக உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை டிசம்பர் 22-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x