Last Updated : 24 Nov, 2020 09:59 AM

 

Published : 24 Nov 2020 09:59 AM
Last Updated : 24 Nov 2020 09:59 AM

புதுச்சேரிக்கு பேரிடர் மீட்புக் குழுவினர் வருகை; காலை முதல் மிதமான மழைப்பொழிவு; கடல் சீற்றம்: பள்ளிகளுக்குத் தாமதமாக விடுமுறை அறிவித்த கல்வித்துறை

புதுச்சேரி

நிவர் புயல் காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் காலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. பேரிடர் மீட்புக் குழுவினர் 36 பேர் புதுச்சேரி வந்துள்ளனர். பள்ளிகளுக்கு விடுமுறை எனக் கல்வித்துறை 9 மணிக்கு மேல் அறிவித்தது. ஆனால், பல பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கிவிட்டன.

வங்கக் கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் நாளை மாலை காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யக்கூடும் என எச்சரித்திருந்தது. இந்நிலையில் இன்று காலை முதல் புதுச்சேரி மாநிலம் முழுவதும் மழை பெய்யத் தொடங்கியது.

புயல் காரணமாக கடல் சீற்றம் அதிகரித்துக் காணப்படுகிறது. அலைகளின் வேகம் அதிகமாக உள்ளது. புயலை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு நிர்வாகம் எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அரக்கோணத்தில் இருந்து 36 பேர் கொண்ட இரு தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் இன்று புதுச்சேரி வந்துள்ளன. தற்போது அவர்கள் போலீஸ் பயிற்சிப் பள்ளியில் தங்கியுள்ளனர்.

இன்றும்,நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை

நிவர் புயல் காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்றும், நாளையும் விடுமுறை என்று கல்வித்துறை காலை 9 மணிக்கு மேல் அறிவித்தது. ஆனால் அதற்குள் பல தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கிவிட்டதாகப் பெற்றோர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x