சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கை ஆகிய நான்கு மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கை ஆகிய நான்கு மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
Updated on
1 min read

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக காலை நிலவரப்படி சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட தகவல்:

''வங்கக் கடலில் ஆழந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் 450 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது

சாலைகளில் தண்ணீர் தேங்கக்கூடும். மின் தடை ஏற்படலாம். மரங்கள் முறிந்து விழலாம் என்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

நள்ளிரவு முதல் காலை வரை பெய்த மழையைப் பொறுத்தவரை நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம் ஆகிய பகுதிகளில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தாம்பரம், தரமணி ஆகிய பகுதிகளில் 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. புழல் பகுதியில் 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. செம்பரம்பாக்கம் பகுதியில் 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

புயல் அறிவிப்பு

நள்ளிரவு 2.30 மணி நிலவரப்படி புதுவையிலிருந்து கிழக்கு தென்கிழக்கு திசையிலிருந்து 440 கி.மீ. தொலைவிலும். சென்னையிலிருந்து 470 கி.மீ. தொலைவிலும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. இன்னும் சற்று நேரத்தில் நிவிர் புயலாக மாறி, இன்று மாலை தீவிரப் புயலாக வலுப்பெறும்.

மாமல்லபுரத்துக்கும் காரைக்காலுக்கும் இடையே நிவர் தீவிரப் புயல் கரையைக் கடக்கும். அப்போது 100 முதல் 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். சில சமயங்களில் 120 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

இன்று தென்மேற்கு வங்கக் கடல், தமிழகம், புதுச்சேரி கடற்பகுதிகளில் 80 முதல் 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். நாளை பிற்பகல் புயல் கரையைக் கடக்கும்போது 100 முதல் 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்.

புயல் கரையைக் கடக்கும்போது வட தமிழகக் கடலோரப் பகுதியைப் பொறுத்தவரை 4 முதல் 5 மீட்டர் உயரத்திற்கு கடல் அலைகள் எழும்பும். தென் தமிழகக் கடலோரப் பகுதியைப் பொறுத்தவரை 1.5 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு கடல் அலைகள் எழும்பும்.

கடலோரத்தில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்''.

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in