

வங்கக் கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் மரக்காணத்தில் இருந்து மாமல்லபுரம் இடையில் நாளை மறுநாள் (25-ம் தேதி) கரையைக் கடக்கக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்தப் புயலின் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் மறு உத்தரவு வரும் வரையில் மீன் பிடிக்கக் கடலுக்குச் செல்லக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது.
இந்த அறிவிப்பால் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 19 கிராம மீனவர்கள் மீன் பிடிக்கக் கடலுக்குச் செல்லவில்லை. இந்நிலையில் நிவர் புயலால் மரக்காணம் பகுதியில் கடல் சீற்றம் ஏற்பட்டு வழக்கத்திற்கு மாறாகக் கடல் அலைகள் அதிக உயரம் எழும்பி தரைப் பகுதியைத் தாக்குகின்றன. இதன் காரணமாக மீனவர்கள் கடற்கரை ஓரமாக நிறுத்தி வைத்திருந்த ஃபைபர் படகுகள், மீன்பிடி வலைகள் மற்றும் இன்ஜின்களை மேடான இடங்களுக்குப் பாதுகாப்பாக எடுத்துச் செல்கின்றனர்.
மரக்காணம் எக்கியர்குப்பம் பகுதியில் உள்ள மீனவர்களது விசைப்படகுகள் மற்றும் மீன்பிடிச் சாதனங்களைப் பாதுகாப்பாக வைக்கப் பொது இடம் இல்லை. இதனால் இப்பகுதி மீனவர்கள் மீன் பிடி உபகரணங்களைப் பாதுகாப்பாக வைக்க, பொது இடம் ஏற்படுத்திக் கொடுக்க மீன்வளத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
இப்பகுதியில் நிவர் புயல் தாக்கினால் கடும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் கடற்கரையோரம் உள்ள மீனவர்கள் மற்றும் பொதுமக்களைப் பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்க அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.