Published : 23 Nov 2020 04:27 PM
Last Updated : 23 Nov 2020 04:27 PM

நிவர் புயல் பாதுகாப்பு ஏற்பாடுகள்: அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை

சென்னை

தமிழகம் நோக்கி வரும் நிவர் தீவிரப் புயல் தாக்கும்போது எடுக்கப்படவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து துறை அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார்.

தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி. இன்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக (நிவர்) வலுவடைந்து, அதனைத் தொடர்ந்து 24 மணி நேரத்தில் தீவிரப் புயலாக வலுவடைந்து, வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 25-ம் தேதி பிற்பகலில் காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே புதுவைக்கு அருகே கரையைக் கடக்கக் கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

நாளை மறுநாள் புயல் கரையைக் கடக்கும்போது காற்று மணிக்கு 100லிருந்து 110 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 120 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இதன் காரணமாக, நவ.24 மற்றும் 25 தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட தமிழக வட கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தீவிரப் புயலாக மாறியுள்ள நிவர் அதிக வேகத்துடன் வீசும் வாய்ப்புள்ளதால் தமிழகக் கடலோர மாவட்டங்களில் பாதிப்பு அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதையடுத்து புயல் கரையைக் கடக்கும்போது எடுக்கப்படவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலாளர் சண்முகம், டிஜிபி திரிபாதி, ஊராட்சித்துறை கூடுதல் செயலர் ஹன்ஸ்ராஜ் வர்மா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலர் ஹர்மந்தர் சிங், பேரிடர் மேலாண்மைத்துறை முதன்மைச் செயலர் அதுல்யா மிஸ்ரா, உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர், வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி, உணவுத்துறை கூடுதல் தலைமைச் செயலர் தயானந்த கட்டாரியா மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x