Last Updated : 22 Nov, 2020 12:21 PM

 

Published : 22 Nov 2020 12:21 PM
Last Updated : 22 Nov 2020 12:21 PM

மன்னன் ராஜேந்திர சோழனுக்கு கங்கைகொண்ட சோழபுரத்தில் மணிமண்டபம் கட்ட வேண்டும்: இந்து முன்னணி வலியுறுத்தல்

பிரதிநிதித்துவப் படம்

திருச்சி

மன்னன் ராஜேந்திர சோழனுக்கு, கங்கைகொண்ட சோழபுரத்தில் தமிழ்நாடு அரசு 83 அடி உயரத்தில் சிலை நிறுவி, மணிமண்டபமும் கட்ட வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் சீராதோப்பில் உள்ள பாரத பண்பாட்டு பயிற்சி கல்லூரி வளாகத்தில் இன்று (நவ. 22) நடைபெற்ற அந்த அமைப்பின் மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், "இந்துக்களையும், இந்து மத நம்பிக்கைகளையும் இழிவுபடுத்துவோரை தமிழ்நாட்டில் அரசும், காவல்துறையும், நீதிமன்றமும், சட்டமும் தண்டிப்பதில்லை.

இந்துக்களையும், இந்து மத நம்பிக்கைகளையும் அவமானப்படுத்துவோருக்கும் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் திட்டத்துக்கு எதிராக மக்களை தூண்டிவிடுவோருக்கும் கண்டனங்களைத் தெரிவிப்பதுடன், மத்திய - மாநில அரசுகள் இந்தப் போராட்டங்களுக்கு அடிபணியாமல் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை விரைவாக எடுக்க வேண்டும்.

கோயில்களில் அனைத்து முறையிலான வழிபாடுகளுக்கும் மக்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும். மேலும், கோயில்களில் அனைத்து திருவிழாக்களையும் தனிமனித இடைவெளியுடன் பாரம்பரிய முறைப்படி நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும்.

கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைவதற்கு முக்கிய பங்காற்றிய தாணுலிங்க நாடாரை கவுரவப்படுத்த தமிழ்நாடு அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, அவரது நினைவிடத்தில் கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைந்த நவ.1-ம் தேதியன்று ஆண்டுதோறும் தாணுலிங்க நாடாரின் பெருமையை தமிழ்நாடு அரசு நினைவு கூற வேண்டும்" என்பன உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x