Published : 22 Nov 2020 03:14 AM
Last Updated : 22 Nov 2020 03:14 AM

அதிமுகவிடம் எத்தனை தொகுதி, எந்தெந்த தொகுதி கேட்பது?- பாஜக நிர்வாகிகளிடம் கருத்து கேட்ட அமித்ஷா

சென்னை

அதிமுகவிடம் எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் கேட்பது என்பது குறித்து பாஜக மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்களிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் கேட்டறிந்தார்.

தமிழக அரசு விழாவில் பங்கேற்ற பிறகு, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள லீலா பேலஸ் ஓட்டலுக்கு அமித்ஷா வந்தார். அங்கு பாஜக மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்றார். சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்த இக்கூட்டத்தில், சமீபத்தில் கட்சியில் இணைந்த வி.பி.துரைசாமி, அண்ணாமலை, குஷ்பு, நேற்று இணைந்த கே.பி.ராமலிங்கம் உள்ளிட்டோரை அமித்ஷாவிடம் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அறிமுகப்படுத்தினார்.

அப்போது பேசிய எல்.முருகன், ‘‘தமிழகத்தில் பாஜக அசைக்க முடியாத சக்தியாக வளர்ந்து வருகிறது. இளைஞர்கள் பாஜகவை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர். தமிழ்க் கடவுள் முருகனை அவமதித்தவர்களின் பின்னணியில் திமுக உள்ளது. வேல் யாத்திரை அவசியம்தானா என்று கேட்கின்றனர். வேல் யாத்திரை அத்தியாவசியமானது’’ என்றார்.

இன்றுமுதல்..

பின்னர், பத்திரிகையாளர்கள் அனைவரும் வெளியே அனுப்பப்பட்டனர். அதன்பிறகு கட்சி நிர்வாகிகளிடம் உரையாடிய அமித்ஷா, ‘‘வரும் பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி உறுதியாகியுள்ளது. வரும் தேர்தலில் இரட்டை இலக்க தொகுதிகளில் வென்று பாஜகவினர் சட்டப்பேரவைக்குள் நுழைய வேண்டும். அதற்கு இன்றுமுதல் கடுமையாக உழைக்க வேண்டும்’’ என்று வேண்டுகோள் விடுத்ததாக கூட்டத்தில் பங்கேற்ற ஒருவர் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் தெரிவித்தார்.

பலம், பலவீனம்

தமிழகத்தில் பாஜகவின் பலம் குறித்து நிர்வாகிகளிடம் உரையாடிய அமித்ஷா, அதிமுகவிடம் எத்தனை தொகுதிகள் கேட்கலாம், எந்தெந்த தொகுதிகளை கேட்கலாம், பாஜகவுக்கு 20 சதவீதத்துக்கும் அதிகமான வாக்கு வங்கி உள்ள தொகுதிகள் எவை, வேறு எந்த கட்சிகளை கூட்டணியில் சேர்க்கலாம், அதிமுக கூட்டணியின் பலம், பலவீனம், திமுக கூட்டணியின் பலம், பலவீனம் என்று பல்வேறு கேள்விகளை எழுப்பி நிர்வாகிகளின் மனதில் உள்ளதை கேட்டறிந்ததாக கூட்டத்தில் பங்கேற்ற பாஜக நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x