Published : 24 Mar 2014 01:26 PM
Last Updated : 24 Mar 2014 01:26 PM
திமுக முன்னாள் தென் மண்டல அமைப்புச் செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரியை, சிவகங்கை தொகுதி பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா இன்று சந்தித்தார்.
மதுரையில் உள்ள அழகிரியின் வீட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஹெச். ராஜா, மோடி பிரதமராக வேண்டும் என கூறிய அழகிரியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்ததாக கூறினார். மக்களவை தேர்தல் குறித்து ஆலோசித்ததாக அவர் தெரிவித்தார். மேலும், மக்களவை தேர்தலில் அழகிரியின் ஆதரவை கோரியதாகவும் தெரிவித்தார். தென் மண்டலத்தில் அழகிரி ஒரு சக்தி வாய்ந்த மனிதர் என்பதனால் அவரது ஆதரவை கோரியுள்ளதாக ராஜா விளக்கமளித்தார். பாஜகவை ஆதரிப்பதில் அழகிரி நல்ல முடிவு எடுப்பார் என தான் நம்புவதாகவும் ராஜா கூறினார்.
நேற்று, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அழகிரியை சந்தித்தார். அவரைத் தொடர்ந்து ஹெச்.ராஜாவும் இன்று அழகிரியை சந்தித்துள்ளார்.
தேனி தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் அழகுசுந்தரமும் மு.க.அழகிரியை இன்று நேரில் சந்தித்து ஆதரவு கோரினார்.
இதற்கிடையில், சென்னையில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், மதுரை செல்லும் போது மு.க.அழகிரியை சந்திப்பேன் என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT