Published : 22 Nov 2020 03:15 AM
Last Updated : 22 Nov 2020 03:15 AM
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 2 நாள் பயணமாக நேற்று பிற்பகல் சென்னை வந்தார். விமான நிலையத்திலிருந்து வெளியே வந்தவர் தொண்டர்களை உற்சாகப்படுத்தும் விதமாக 300 மீட்டர் தூரம் நடந்து வந்தார்.
அப்போது மெட்ரோ ரயில் பாலத்துக்கு கீழே கூட்டத்தினருடன் நின்று கொண்டிருந்த ஒருவர், திடீரென தனது கையில் வைத்திருந்த அட்டை பதாகையை அமித் ஷாவை நோக்கி தூக்கி எறிந்தார். அது கூட்டத்துக்கு உள்ளேயே விழுந்துவிட்டது. இதைப் பார்த்த போலீஸார், அந்த நபரை சுற்றிவளைத்து பிடித்து பரங்கிமலை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
விசாரணையில், அவர் நங்கநல்லூரைச் சேர்ந்த 67 வயதான துரைராஜ் என்பதும், மது அருந்தி இருந்ததும் தெரியவந்தது. அவர் வீசி எறிந்த பதாகையில் அமித் ஷாவை வரவேற்கும் விதமான வாசகங்களே இருந்தன. அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார், விசாரணைக்குப் பிறகு அவரை விடுவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT