Last Updated : 21 Nov, 2020 06:43 PM

 

Published : 21 Nov 2020 06:43 PM
Last Updated : 21 Nov 2020 06:43 PM

அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவப் படிப்புச் செலவை அரசு ஏற்கும்; ஸ்டாலின் அறிவிப்புக்குப் பிறகு முதல்வர் அறிவிக்க காரணம் என்ன?- தங்கம் தென்னரசு கேள்வி?

விருதுநகர்

அரசு பள்ளியில் படித்து மருத்துவப் படிப்பில் சேரும் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என தமிழக முதல்வரும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்,திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தபிறகு ஏன் இந்த அறிவிப்பை முதல்வர் அவசர அவசரமாக வெளியிடுகிறார் என முன்னாள் கல்வித்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு கேள்வி எழுப்பினார் .

இதுகுறித்து, விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயின்று நீட் தேர்வில் வென்று 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் மருத்துவக் கல்வி படிக்க உள்ள அனைத்து மாணவர்களின் கல்விக் கட்டணம் முழுவதையும் திமுக ஏற்கும் என திமுக தலைவர் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு வரலாற்றில் குறிப்பிடத்தக்கது. கிராமப்புற மாணவர்களின் மருத்துவப் படிப்பு என்ற கனவு நீட் தேர்வால் பாதிக்கப்பட்டபோது நீட் தேர்வை முழுவதுமாக ரத்துசெய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்துவது திமுகதான்.

நீட் தேர்வை தமிழக அரசு புறவாசல் வழியாக அனுமதித்துவிட்டு 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டை கொண்டுவந்தாலும் இதனால் பயன்பெறும் மாணவர்கள் தனியார் கல்லூரிகளில் அரசு இடஒதுக்கீட்டில் அதிக கல்விக் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. அவர்களது பெருளாதார நிலையை கருதியே ஸ்டாலின் அறிப்பை வெளியிட்டுள்ளார். இதனால் 86 ஆண்டு மாணவர்கள் பயன்பெறுவார்கள். இந்த அறிவிப்பு மாணவர்கள், பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

7.5 சதவிகித ஒதுக்கீடும் திமுக ஸ்டாலின் அரசியல் ரீதியாக உரிய அழுத்தம் கொடுத்ததால் வந்தது. இதனால் அரசு பள்ளிகளில் பயின்ற 313 பேருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால், தற்போது அரசு பள்ளியில் படித்து மருத்துவப் படிப்பில் சேரும் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என தமிழக முதல்வரும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தபிறகு ஏன் இந்த அறிவிப்பை முதல்வர் அவசர அவசரமாக வெளியிடுகிறார்? முன்பே அறிவிப்பு வெளியிடாதது ஏன்? யார் அவரைத் தடுத்தது? நேரடியாக மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என ஏன் அறிவிக்கவில்லை?

மத்திய உள்துறை அமித்ஷா வந்தபின் இந்த அறிவிப்பை வெளியிடலாம் என்றோ அல்லது அவரது அனுமதியைப் பெற்றபின் இந்த அறிவிப்பை வெளியிடலாம் என முதல்வர் கருதிக்கொண்டிருந்தாரா எனத் தெரியவில்லை. முதல்வர் பழனிசாமிக்கு தேர்தல் தோல்வி பயம் வந்துவிட்டது. அரசின் தவறான நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி ஸ்டாலின் திருத்தி வருகிறார். அதற்கு மக்களிடம் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

உலக வரலாற்றில் பாஜக தலைவரை வரவேற்க அதிமுகவினர் கொடியோடு சென்றது இப்போதுதான். பாஜகவின் ஒரு அங்கம் அதிமுக என நினைத்தோம். ஆனால், அதிமுக என்பது பாஜகதான் என அவர்களாக நிரூபித்துக்கொண்டிருக்கிறார்கள்.

பாஜகவின் இன்னொரு வடிவம்தான் அதிமுக. விருதுநகர் மாவட்டத்தில் 7 தொகுதியிலும் திமுகவும் கூட்டணிக் கட்சியும் வெற்றிபெறும். மாவட்ட அமைச்சருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமையும்போது இந்த நீட் தேர்வை தமிழகத்திலிருந்து முற்றிலுமாக விரட்டுவோம் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x