Published : 21 Nov 2020 03:16 AM
Last Updated : 21 Nov 2020 03:16 AM
மெட்ரோ ரயில் திட்டம் உள்ளிட்ட வளர்ச்சி திட்டங்களை தொடங்கிவைக்க தமிழகத்துக்கு வருகை தரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அதிமுக அரசின் கோரிக்கையை ஏற்று தமிழ் மொழியை ஆட்சி மொழியாக அறிவிப்பார் என நம்புகிறோம் என தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த கூவத்தூரில் அதிமுகவின் வாக்குச்சாவடி நிலை முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம், அக்கட்சியின் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட தேர்தல் பொறுப்பாளரும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சருமான பாண்டியராஜன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், கிராமப் பகுதிகளில் தேர்தல் பணிகளை மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. தேர்தல் களப்பணிகள் தொடர்பாக அக்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் கருத்து கேட்டறியப்பட்டது. இதேபோல், கருங்குழி, திருப்போரூர் பகுதிகளிலும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் பாண்டியராஜன் கூறியதாவது:
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மெட்ரோ ரயில் திட்டம் 2-ன் பணிகளுக்கான அடிக்கல் நாட்டுவது உட்பட பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கிவைக்க தமிழகத்துக்கு வருகை தருகிறார். நாம், தமிழ் மொழியை ஆட்சிமொழியாக அறிவிக்க வேண்டும், தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் தமிழிலும் அறிவிப்பு பலகைகளை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகிறோம். அதிமுகவின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, அதற்கான அறிவிப்புகளை உள்துறை அமைச்சர் வெளியிடுவார் என நம்புகிறோம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT