Published : 20 Nov 2020 07:56 PM
Last Updated : 20 Nov 2020 07:56 PM

வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு; சென்னையில் 16 தொகுதிகளில் சனி, ஞாயிறு 2 நாள் சிறப்பு முகாம்

சென்னை மாவட்டத்தை உள்ளடக்கிய 16 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உட்பட்ட அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் செய்து கொள்ளலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையரும்/ தேர்தல் அதிகாரியுமான பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

“இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி சென்னை மாவட்டத்தில் உள்ளடக்கிய 16 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் ஜன.01/2021 ஆம் தேதியினைத் தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு 2021ஆம் ஆண்டின் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இச்சுருக்கமுறை திருத்தம் தொடர்பாக வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த நவ.16 அன்று வெளியிடப்பட்டடது. மேற்படி வரைவு வாக்காளர் பட்டியல் சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் 4, 5, 6, 8, 9, 10, 13 மற்றும் வாக்குச்சாவடி மையங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்களது பெயர்கள் மற்றும் குடும்பத்தாரின் பெயர்கள் குறித்த விவரங்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனவா என்பது குறித்து சரிபார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காமல் உள்ளவர்கள் மற்றும் ஜன.01/2021 அன்று 18 வயது நிறைவு அடைகின்றவர்கள் (01.01.2003-ம் தேதிக்கு முன் பிறந்தவர்கள்) படிவம் 6-ஐப் பூர்த்தி செய்தும் பெயரைச் சேர்க்கலாம்.

பெயர்கள் நீக்கம் தொடர்பாக படிவம் 7-ஐப் பூர்த்தி செய்தும், பதிவுகளில் திருத்தம் தொடர்பாக படிவம் 8-ஐப் பூர்த்தி செய்தும், சட்டப்பேரவைத் தொகுதிக்குள்ளேயே ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு குடிபெயர்ந்து புதிய வசிப்பிடத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் 8-­Aவைப் பூர்த்தி செய்தும் அதற்கான ஆவண ஆதார நகலினை இணைத்தும் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் / பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல அலுவலரின் அலுவலகத்தில் டிச.15/2020 காலத்திற்குள் விண்ணப்பிக்கலாம்.

மேலும், நவ.21, 22 மற்றும் டிசம்பர் 12, 13 (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில்) ஆகிய தினங்களில் சென்னை மாவட்டத்தில் உள்ளடக்கிய 16 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குட்பட்ட 3,754 வாக்குச்சாவடிகள் அடங்கிய 902 வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

அம்மையத்தில் பொதுமக்கள் உரிய படிவங்களைப் பெறவும். பூர்த்தி செய்த படிவங்களையும் சிறப்பு முகாம் நடைபெறும் இடங்களில் சேர்க்கவும் செய்யலாம். மேலும் www.elections.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் பெயர்கள் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்கள் தொடர்பாகவும் விண்ணப்பிக்காலம்.

ஜனநாயகத்தினை வலுப்படுத்த, தகுதியுள்ள அனைத்து பொதுமக்களும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற ஏதுவாக, வரைவு வாக்காளர் பட்டியலைப் பார்வையிட்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்”.

இவ்வாறு மாவட்டத் தேர்தல் அலுவலர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x