Published : 20 Nov 2020 06:47 PM
Last Updated : 20 Nov 2020 06:47 PM

உதயநிதி ஸ்டாலின் கைது; அனுமதி மறுத்தால் தடையை மீறி பிரச்சாரப் பயணம்: துரைமுருகன் எச்சரிக்கை

சென்னை

ஜனநாயக உரிமை, கருத்துரிமை ஆகியவற்றைக் கருத்தில் வைத்து பிரச்சாரப் பயணத்துக்கான முறையான அனுமதியை அரசு வழங்க வேண்டும். முறையான அனுமதி தர அரசும், காவல்துறையும் மறுக்கப்படுமானால் தடையை மீறி கட்சியின் பிரச்சாரப் பயணம் தொடரும் என துரைமுருகன் எச்சரித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் கைதைக் கண்டித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் இன்று வெளியிட்ட அறிக்கை:

“தமிழகம் மீட்போம் என்ற கொள்கைப் பிரகடனத்துடன் 'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' என்ற பிரச்சாரப் பயணத்தை திமுக இன்று முதல் தொடங்கி இருக்கிறது. இது தொடர்பான முறையான அறிவிப்பை கட்சியின் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு அறிவிப்பு செய்துள்ளார்.

இதன் தொடக்கமாக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், இன்று மதியம் தனது பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார். பிரச்சாரப் பயணத்தை, தமிழ்ச் சமுதாயத்தின் விடியலுக்கு வித்திட்ட தமிழ் ஒளிவிளக்காம் கருணாநிதி பிறந்த திருக்குவளை வீட்டில் இருந்து கால் பதித்து அங்கிருந்து தொடங்கினார். பயணம் தொடங்கிய இடத்திலும், வழியெங்கும் குவிந்த மக்கள் கூட்டத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அதிமுக அரசு, காவல்துறையின் துணையோடு இந்தப் பயணத்தை நசுக்க முடிவெடுத்துள்ளது.

உதயநிதி கைது செய்யப்பட்டுள்ளார். இன்று முதல் டிசம்பர் 1ஆம் தேதி வரை நடக்க இருந்த முதற்கட்டப் பயணத்தைத் தொடங்கிய இடத்திலேயே மறித்த அதிமுக அரசின் அராஜகப் போக்குக்கு எனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். நித்தமும் ஒரு மாவட்டத்துக்குப் போய், அரசு நிகழ்ச்சி, ஆய்வு என்ற போர்வையில் எதிர்க்கட்சிகளைத் தரம் தாழ்ந்து விமர்சித்து தனது அரசியல் பிரச்சாரத்தைச் செய்து வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

பேட்டிகள் கொடுப்பது, கலந்தாலோசனைகள் செய்வது என்பதை அவரோ, அமைச்சர்களோ, அவர்களது கட்சியோ நிறுத்தவில்லை. ஆனால், திமுக நடத்தும் கூட்டங்களாக இருந்தால் அதற்கு அனுமதி மறுப்பதை வழக்கமாக வைத்துள்ளது அரசு. ஆளுநர் மாளிகை நோக்கிய மகளிர் பேரணியைத் தடுத்து, மகளிரணிச் செயலாளர் கனிமொழி உள்ளிட்டோரைக் கைது செய்தது இந்த அரசு. ஆனால் அமைச்சர்களுக்கோ, ஆளும் கட்சிக்கோ எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை.

இதை வைத்துப் பார்க்கும்போது, திமுகவின் தேர்தல் பணிகளைத் தடுக்கும் நோக்கத்துடன்தான் கரோனா கட்டுப்பாட்டுகள் என்ற திரைமறைவுக் கட்டுப்பாடுகளை எடப்பாடி பழனிசாமி தொடர்கிறார் என்ற சந்தேகம் எழுகிறது. இளைஞரணிச் செயலாளர் உதயநிதி கைது செய்யப்பட்டாலும், இந்தப் பிரச்சாரப் பயணம் நிற்காது.

உதயநிதி தனது பயணத்தைத் தொடர்வார். திட்டமிட்டபடி கட்சி முன்னணியினர் அனைவரும் தங்களது பயணங்களைத் தொடர்வார்கள். ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிப்பதன் மூலமாக திமுகவின் செயல்பாட்டைத் தடுத்துவிடலாம் என்று எடப்பாடி அரசு கருதுமானால் அது, சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாகவே மக்கள் மன்றத்தில் தனிமைப்படுத்தப்பட்டுவிடும் என எச்சரிக்கிறேன்.

இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். ஜனநாயக உரிமை, கருத்துரிமை ஆகியவற்றைக் கருத்தில் வைத்து பிரச்சாரப் பயணத்துக்கான முறையான அனுமதியை அரசு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். முறையான அனுமதி தர அரசும், காவல்துறையும் மறுக்கப்படுமானால் தடையை மீறி கட்சியின் பிரச்சாரப் பயணம் தொடரும் என்பதையும் சொல்லிக் கொள்கிறேன்”.

இவ்வாறு துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x