நவ.23, 24 ஆம் தேதிகளில் தமிழகத்தில் கனமழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் 

நவ.23, 24 ஆம் தேதிகளில் தமிழகத்தில் கனமழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் 
Updated on
2 min read

தமிழகத்தில் வரும் 23 மற்றும் 24 தேதிகளில் டெல்டா உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட தகவல்:

“தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் மதுரை, தேனி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் ஏனைய பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும்.

நவ.21 மற்றும் நவ.22 ஆகிய தேதிகளில் ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் லேசான மழையும், ஏனைய பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும்.

நவ.23ஆம் தேதி நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நவ.24ஆம் தேதி கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை , சிவகங்கை , ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழையும், ஏனைய கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸையும் ஒட்டி பதிவாகக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை பெய்த விவரம்:

வைப்பாறு (தூத்துக்குடி) 10 செ.மீ., எட்டயபுரம் (தூத்துக்குடி), திருபுவனம் (சிவகங்கை), சிவகாசி (விருதுநகர்), மதுரை (மதுரை) தலா 4 செ.மீ., சூரன்குடி (தூத்துக்குடி), வாலிநோக்கம் (ராமநாதபுரம்), புளிப்பாட்டி (மதுரை) தலா 3 செ.மீ., போடிநாய்க்கனுர் (தேனி) , கிராண்ட் அணை (தஞ்சாவூர்) , சிட்டாம்பட்டி (மதுரை) தலா 2 செ.மீ.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

அரபிக்கடல் பகுதிகளில் நவம்பர் 20 முதல் நவம்பர் 23ஆம் தேதி வரை தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

நவம்பர் 20 முதல் நவம்பர் 24ஆம் தேதி வரை மத்திய அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

நவம்பர் 23ஆம் தேதி தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

நவம்பர் 24ஆம் தேதி தென்மேற்கு வங்கக் கடலில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

நவம்பர் 25ஆம் தேதி தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்”.

மீனவர்கள் மேற்கூறிய பகுதிகளுக்குச் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்’’.

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in