Published : 19 Nov 2020 09:20 PM
Last Updated : 19 Nov 2020 09:20 PM

காலியாக உள்ள மாநிலக் குழந்தைகள் நல ஆணையப் பதவிகள் நிரப்பப்படாதது ஏன்?- உயர் நீதிமன்றம் கேள்வி 

காலியாக உள்ள மாநிலக் குழந்தைகள் நல ஆணையப் பதவிகள் நிரப்பப்படாததற்குக் கண்டனம் தெரிவித்த உயர் நீதிமன்றம், 2016-ம் ஆண்டு முதல் பல உத்தரவுகள் பிறப்பித்தும் குழந்தைக் கடத்தல் வழக்குகளைக் காவல்துறையினர் முறையாகக் கையாளவில்லை எனக் கண்டனம் தெரிவித்தது.

கடந்த 2016 ஆம் ஆண்டு சென்னை, பாரிமுனை பகுதியில் தெருவோரம் தூங்கிய 8 மாதக் குழந்தை ராகேஷ், வால்டாக்ஸ் சாலையோரம் தூங்கிய சரண்யா ஆகியோர் கடத்தப்பட்டனர். கடத்தப்பட்ட குழந்தைகளை மீட்கக் கோரி எக்ஸ்னோரா அமைப்பின் நிறுவனர் நிர்மல் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார்.

ஏற்கெனவே இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், குழந்தைகள் கடத்தலைத் தடுக்க அரசு எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, குழந்தைக் கடத்தல் குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்ய அரசுத் தரப்பில் கூடுதல் அவகாசம் கோரப்பட்டது. இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், குழந்தைகள் கடத்தலைத் தடுக்க தமிழக அரசு தவறிவிட்டதாக வேதனை தெரிவித்தனர்.

தமிழகத்தில் சிறார் நீதிச்சட்ட விதிகளைப் பின்பற்றாமல் செயல்படும் சிறார் காப்பகங்கள் மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், லாப நோக்கில் செயல்படும் இதுபோன்ற காப்பகங்களால்தான் ஆதரவற்ற குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்படுவதாக வேதனை தெரிவித்தனர்.

கரோனா பேரிடர் காலத்தில் இதுபோன்ற காப்பகங்களில் தங்கியிருந்த ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் சிறார்களின் நலனுக்காக ஒரு பொதுநல வழக்கு கூட தொடரப்படவில்லை என நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

தமிழக அரசும் அவர்கள் குறித்துக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை எனக் கவலை தெரிவித்த நீதிபதிகள், அவர்கள் கடவுளின் பிள்ளைகள் என்பதால்தான் அவர்கள் மீது யாரும் அக்கறை கொள்ளவில்லையா எனவும் சந்தேகம் எழுப்பினர்.

பல டிராபிக் சிக்னல்களில் ஏராளமான குழந்தைகளை வைத்து, வடமாநிலப் பெண்கள் பிச்சை எடுப்பது அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அவர்கள் வைத்திருப்பது கடத்தப்பட்ட குழந்தைகளா? அவர்களுக்கு மயக்க மருந்து செலுத்தப்படுகிறதா என்பது குறித்து ஏன் காவல் துறையினர் விசாரணை மேற்கொள்வதில்லை எனவும் கேள்வி எழுப்பினர்.

காலியாக உள்ள மாநிலக் குழந்தைகள் நல ஆணையப் பதவிகள் நிரப்பப்படாததற்குக் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், 2016-ம் ஆண்டு முதல் பல உத்தரவுகள் பிறப்பித்தும் குழந்தைக் கடத்தல் வழக்குகளைக் காவல்துறையினர் முறையாகக் கையாளவில்லை எனவும் கருத்துத் தெரிவித்தனர்.

மேலும், தமிழகத்தில் குழந்தைக் கடத்தல் தொடர்பாக பெறப்பட்ட புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஜனவரி 25-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு சமூக நலத்துறை முதன்மைச் செயலாளர்கள், குழந்தைக் கடத்தல் தடுப்புப் பிரிவு கூடுதல் டிஜிபி சீமா அகர்வால் உள்ளிட்டோருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x