Last Updated : 19 Nov, 2020 06:08 PM

 

Published : 19 Nov 2020 06:08 PM
Last Updated : 19 Nov 2020 06:08 PM

திருப்பத்தூர் அருகே கி.பி. 16-ம் நூற்றண்டைச் சேரந்த 'நாக தேவதை' நடுகல் சிதைந்த நிலையில் கண்டெடுப்பு

திருப்பத்தூர் அருகே எலவம்பட்டி கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட நாகதேவதை நடுகல்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே கி.பி. 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த 'நாக தேவதை' நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் அடுத்த எலவம்பட்டி கிராமத்தில் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர் மோகன்காந்தி, முனைவர் பட்ட ஆய்வு மாணவி மணிமேகலை மற்றும் ஆய்வுக் குழுவினர் திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வரலாற்று ஆவணங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

அந்த வகையில், திருப்பத்தூர் - சேலம் சாலையில் சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ள எலவம்பட்டி கிராமத்தில் கள ஆய்வு நடத்தியபோது கி.பி.16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த 'நாக தேவதை' நடுகல்லைக் கண்டெடுத்துள்ளனர்.

இதுகுறித்துப் பேராசிரியர் மோகன்காந்தி கூறியதாவது:

"திருப்பத்தூர் அடுத்த எலவம்பட்டி கிராமத்தில் உள்ள நூலகத்துக்கு அருகாமையில் கள ஆய்வு நடத்தினோம். அங்கு சுமார் 500 ஆண்டுகளுக்கு முந்தைய விஜயநகரப் பேரரசு காலத்தைச் சேர்ந்த நாக தேவதை (நாகினி) நடுகல் ஒன்றைக் கண்டெடுத்தோம்.

இக்கல்லானது 3 அடி உயரம், 2 அடி அகலத்தில் அமைந்துள்ளது. காலில் இருந்து இடுப்புப் பகுதி வரை நாகமாகவும், இடுப்பில் இருந்து தலைப்பகுதி வரை பெண்ணாகவும் நாகதேவதை உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.

இக்கல்லின் தலையில் கிரீடம் போன்ற அமைப்பு ஒன்றும் உள்ளது. கைகளை வணங்கிய கோலத்தில் நாகதேவதை காட்சி தருகிறது. நாகதேவதையின் 2 பக்கங்களிலும் படம் எடுத்து கோலத்தில் 2 நாக உருவங்கள் உள்ளன.

இக்கல்லுக்கு அருகிலேயே நாக உருவம் பொறிக்கப்பட்ட கல் ஒன்றும் உள்ளது. அதன் அருகே தலைப்பகுதி மட்டும் வெளிப்படும் உருவம் காணப்படுகிறது. தமிழர் பண்பாட்டில் நாக வழிபாடு பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது. சங்ககால இலக்கியமான மலைபடுகடாம் என்ற நூல் 'நன்னன் சேய் நன்னன்' என்ற மன்னனைக் காண அவனது மலையான நவிரமலையைக் (தற்போது ஜவ்வாதுமலை) கூத்தர்கள் கடக்க முயன்றபோது, இடையில் பல பாம்புகள் தென்படும். அவற்றைக் கைத்தொழுது வணங்கிச் செல்லுங்கள் என்று மலைபடுகடாமைப் பாடிய பெருங்குன்றூர் பெருங்கெளசிகனார் கூறுகிறார்.

திருப்பத்தூரில் உள்ள ஜவ்வாதுமலையில் இன்றும் மக்கள் திருவிழா நாட்களில் பாம்பு புற்று மண்ணை எடுத்து வந்து, அதற்கு பச்சைப் பந்தலிட்டு வழிபாடு செய்கின்றனர். எலவம்பட்டி கிராமம் ஜவ்வாதுமலைக்கு அருகாமையிலேயே இருக்கிறது.

பொதுவாக நாக வழிபாடு என்பது அச்சத்தின் காரணமாகத் தோன்றியதாகும். பாம்பு கொடிய விஷம் கலந்த உயிரினம் என்பதால் வீடுகள், நிலங்களுக்குள்ளாக வந்தாலும், தொழில் நிமித்தமாக பொதுமக்கள் காட்டுப்பகுதிக்குள் செல்லும் போது தங்களைத் தன் கொடிய நஞ்சால் கொல்லக்கூடாது என்பதற்காக அவற்றை வழிபட்டிருக்கின்றனர். மக்களின் இந்த அச்சத்தின் வழியே ஏற்பட்டது வழிபாட்டு முறையாகும்.

மக்கள் தாங்கள் வழிபடும் கடவுளின் அணிகலன்களிலும் பாம்புகள் இருக்கும் என நம்பினார்கள். சிவன், காளி, கால பைரவர் போன்ற கடவுள்களுக்கு அணிகலனாகவும், திருமாலுக்குப் படுக்கையாக ஆதிகேசவன் இருப்பதாகவும் முழுமையாக நம்பினார்கள்.

மரங்களின் அடியில் கற்களில் பாம்பு உருவம் பொறித்து அதையும் வணங்குவது தமிழர்களின் நம்பிக்கையும், வழக்கமும் ஆகும். எலவம்பட்டி கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட நாகதேவதை நடுகல் மேல்பாதி உடல் பெண்ணாகவும், கீழே பாதி உடல் பாம்பாகவும் வடித்துள்ள இந்தச் சிலை சுமார் 500 ஆண்டுகள் அதாவது கி.பி.16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழர்கள் வழிபட்டிருக்கலாம். சிதைந்த நிலையில் உள்ள இந்தக் கல்லைத் தொல்லியல் துறையினர் பாதுகாக்க முன்வர வேண்டும்".

இவ்வாறு பேராசிரியர் மோகன்காந்தி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x