Published : 19 Nov 2020 12:28 PM
Last Updated : 19 Nov 2020 12:28 PM

மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்ற 4 மாணவர்களுக்குக் கரோனா தொற்று

நேற்று முதல் நாள் மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்ற மாணவர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில் 4 மாணவர்களுக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதனால் 4 மாணவர்களையும், அவர்களுடன் இருந்தவர்களையும் தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான மருத்துவக் கலந்தாய்வு நேற்று தொடங்கியது. நேரு உள் விளையாட்டரங்கில் தகுந்த பாதுகாப்பு இடைவெளியுடன் தினமும் மருத்துவக் கலந்தாய்வு நடைபெறுகிறது. இதில் முதல் மூன்று நாட்கள் 7.5% உள் ஒதுக்கீடு மற்றும் சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு என அறிவிக்கப்பட்டது. நேற்று முதல் நாள் என்பதால், 7.5% உள் ஒதுக்கீடு பெறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் கலந்தாய்வு நடந்தது. இந்நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி கலந்துகொண்டு, அதற்கான சேர்க்கை ஆணையை வழங்கினார்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் கலந்தாய்வு முடிவில் 313 மாணவர்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அரசுப் பள்ளி மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுடன் கலந்துகொண்டனர்.

மருத்துவக் கலந்தாய்வில் சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட விஷயங்கள் உள்ளதால், ஆன்லைன் மூலம் கலந்தாய்வு இல்லை. நேரடிக் கலந்தாய்வு நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது.

ஆனால் மாணவர்கள், பெற்றோர்களுக்குக் கரோனா பரிசோதனை முடிந்தபின்னரே நேரடிக் கலந்தாய்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று கலந்தாய்வுக்கு வந்த மாணவர்களுக்குக் கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 4 மாணவர்களுக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்டது. ஆனால், அவர்களுக்கு அறிகுறியற்ற தொற்று இருப்பது தெரியவந்தது.

உடனடியாக அந்த மாணவர்கள், அவர்களது பெற்றோருக்குத் தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் நேரடிக் கலந்தாய்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படவில்லை. அவர்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது. அவர்களுக்கான சான்றிதழ் உள்ளிட்டவை காணொலி மூலம் சரிபார்க்கப்பட்டு அவர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டதாக மருத்துவக்கல்வி இயக்குனரக அதிகாரிகள் தெரிவித்தனர்.

21 ஆம் தேதி முதல் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா கட்டுப்பாடுகளுடன் நடைபெறும் கலந்தாய்வுக்காக வெளிநாடு, வெளி மாவட்டங்களிலிருந்து இருந்து வரும் மாணவர்களுக்காக உணவு, வாகன வசதி, தங்கும் இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கலந்தாய்வில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் 24,712. ஏற்றுக்கொள்ளப்பட்டவை 23,707. இதில் மாணவர்கள் 8,765 பேர், மாணவிகள் 14,942 பேர் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x