Published : 18 Nov 2020 10:20 PM
Last Updated : 18 Nov 2020 10:20 PM

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு மரணத்துக்கு என் மீது பழி போடும் முதல்வர்; உயிரிழந்தவர்கள் வீட்டுக்கு போய் ஆறுதல் சொல்ல தைரியம் உண்டா?- ஸ்டாலின் கேள்வி

சென்னை

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு 13 பேர் மரணத்துக்கு ஸ்டாலின்தான் காரணம் என்றால், அந்தப் பதிமூன்று பேர் வீட்டுக்கு போய் ஆறுதல் சொல்லும் துணிச்சல் பழனிசாமிக்கு உண்டா? அதிகாரம் பொருந்திய முதலமைச்சர் பழனிசாமி, தன்னுடைய போலீஸ் பாதுகாப்போடு அந்த 13 பேரின் வீட்டுக்கு செல்ல முடியுமா? என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

தருமபுரி மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற 'தமிழகம் மீட்போம்' - 2021 சட்டமன்றத் தேர்தல் சிறப்புப் பொதுக் கூட்டத்தில் காணொலி வாயிலாக ஸ்டாலின் பேசியதாவது:

“கரோனா காலம் என்பதால் பல்லாயிரக்கணக்கான மக்களை ஒரே இடத்தில் கூட்டுவது சரியாக இருக்காது என்பதால் காணொலி மூலமாக இத்தகைய கூட்டங்களை ஒருங்கிணைத்து நடத்தி வருகிறோம். இதுதான் ஆளும் அதிமுக அரசுக்கு அளவுக்கு மீறி எரிச்சலையும் கோபத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

எந்தச் சூழலிலும் திமுகவின் செயல்பாட்டைத் தடுக்க முடியவில்லை என்பதால் ஆத்திரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வார்த்தைகளின் வன்மத்தைச் சேர்த்துக் கொட்ட ஆரம்பித்திருக்கிறார்.

அவரது பேச்சைக் கேட்டு எனக்குக் கோபம் வரவில்லை. எடப்பாடி பழனிசாமிக்காக நான் பரிதாபப்படுகிறேன். ஆத்திரம், ஆணவம் அவரது கண்ணை மறைக்கிறது. நாற்காலியை விட்டு இறங்கப் போகிறோம் என்ற கோபம், அவரது நாக்கைத் தடம் புரள வைக்கிறது.

கடந்த வாரம் தென்மாவட்டங்களுக்குச் சுற்றுப்பயணம் சென்ற எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் நாலாந்தரப் பேச்சாளரைப் போலப் பேசி இருக்கிறார். தூத்துக்குடியில் அமைதியான வழியில் ஊர்வலம் போன பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேரைச் சுட்டுக் கொன்ற சம்பவம் நிகழ்ந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், இரண்டு ஆண்டுகள் கழித்து தூத்துக்குடிக்குப் போயிருக்கிறார் பழனிசாமி.

இரண்டு ஆண்டுகளாக அந்தப் பகுதிக்கே போகாதவர், இரண்டு முறை தனது பயணத்தை ரத்து செய்தவர், அங்கே சென்று, 'தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நடக்க ஸ்டாலின்தான் காரணம்' என்று சொல்லி இருக்கிறார்.

13 பேர் பச்சைப்படுகொலை செய்யப்பட்டப் பிறகும் பழனிசாமி திருந்தவில்லை என்பதற்கு உதாரணம்தான் அவரது இந்தப் பேச்சு. 13 பேரைக் கொன்றும், நூற்றுக்கணக்கானவர்கள் காயம்பட்டும் நடந்த கொடூரம், பழனிசாமி ஆட்சியில்தான் நடந்தது. ஆனால் அதற்கு ஸ்டாலின்தான் காரணம் என்று பழனிசாமி சொல்கிறார் என்றால், தமிழ்நாட்டு மக்களை எதுவும் தெரியாத அப்பாவிகளாக அவர் நினைக்கிறாரா? இந்தக் கொடூரக் கொலைகளை மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைக்கிறாரா?

மாபாதகக் கொலைக் குற்றத்தை அரசியல் குற்றச்சாட்டாக திசை திருப்புவதற்கு பழனிசாமி முயற்சிக்கிறார். அதனால்தான், இப்படிப் பேசுகிறார். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு 13 பேர் மரணத்துக்கு ஸ்டாலின்தான் காரணம் என்றால், அந்தப் பதிமூன்று பேர் வீட்டுக்கு போய் ஆறுதல் சொல்லும் துணிச்சல் பழனிசாமிக்கு உண்டா? அதிகாரம் பொருந்திய முதலமைச்சர் பழனிசாமி, தன்னுடைய போலீஸ் பாதுகாப்போடு அந்த 13 பேரின் வீட்டுக்கு செல்ல முடியுமா? அதற்கான அருகதை உண்டா?

தூத்துக்குடிக்குப் போகவே பயந்தவர், தான் செல்லும் பாதையில் கடைகளை மூட வைத்துவிட்டு, தலைமறைத்து ஓடிய கோழைதான் இந்த பழனிசாமி. தூத்துக்குடிக்குச் சென்ற அவரை வழிமறித்து மாரீஸ்வரி என்ற மாற்றுத்திறனாளிப் பெண் ஒருவர் மனு கொடுத்தாராம். அவருக்கு ஒரு மணிநேரத்தில் பழனிசாமி வேலை கொடுத்தாராம். இப்படி ஒரு செய்தியை ஊடகங்களில் பார்த்தேன்.

இந்த நாடகத்துக்குள் நான் போக விரும்பவில்லை. உங்கள் நாடகத்தின் மூலமாக ஒரு தமிழ்ச் சகோதரிக்கு வேலை கிடைத்துள்ளதே என்று மகிழ்ச்சி அடைகிறேன். மாரீஸ்வரிக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த குடும்பத்தினர், முதல்வரை வந்து மொத்தமாகச் சந்திக்க வேண்டும் என்று கேட்டபோது, ஏன் முதல்வர் சந்திக்கவில்லை.

தங்களது குடும்பத்திற்கு தகுதிக்கு ஏற்ற, படிப்புக்கு ஏற்ற வேலை தர வேண்டும் என்று பத்து முறைக்கு மேல் மனுக் கொடுத்தும் ஏன் வேலை தரவில்லை? கண்துடைப்புக்காக ஒருசிலரை மட்டும் சந்தித்து அனுப்பிவிட்டது ஏன்? என்ன பயம்?

மக்களைச் சந்திக்க பயப்படும் பழனிசாமிக்கு முதலமைச்சர் நாற்காலியில் உட்கார என்ன அருகதை இருக்கிறது?

தருமபுரியில் வேளாண் கல்லூரி மாணவிகள் ஹேமலதா, கோகிலவாணி, காயத்ரி ஆகிய மூன்று பேரையும் பேருந்தில் வைத்து எரித்துக் கொன்ற கொடூரச் சம்பவம் இன்னமும் ஆறாத வடுவாகத்தான் எல்லோரது மனதிலும் பதிந்திருக்கிறது.

அந்தக் கொலையாளிகளை, எடப்பாடி பழனிசாமியின் அரசு விடுதலை செய்தது. ஆனா, பேரறிவாளன் உள்ளிட்டோரின் விடுதலை குறித்து மட்டும் எடப்பாடி பழனிசாமி மவுனம் காப்பது ஏன்? இரட்டை வேடம் போடுவதது ஏன்?

அவர் முதல்வராக ஆவதற்கு தமிழ்நாட்டு மக்கள் வாக்களிக்கவில்லை. ஜெயலலிதா இறந்து போனதால் - சசிகலா சிறைக்குப் போனதால் - முதல்வர் ஆனவர் இந்த பழனிசாமி. தன்னால் மறுபடியும் வெற்றி பெற முடியாது, மறுபடியும் முதலமைச்சர் ஆக முடியாது என்பது அவருக்குத் தெரியும். அதனால் வாய்க்கு வந்தபடி பேசி வருகிறார்”.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x