Published : 18 Nov 2020 09:43 PM
Last Updated : 18 Nov 2020 09:43 PM

மருத்துவ கலந்தாய்வு; சென்னை மாநகராட்சி பள்ளி மாணவிகள் 8 பேர் தேர்வு: 7.5% உள் ஒதுக்கீட்டால் பயன்

சென்னை

நீட் மருத்துவ நுழைவுத்தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீட்டை இந்த ஆண்டு அமல்படுத்தியதால் 313 மாணவர்களுக்கு இடம் கிடைத்தது. இதில் சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்கள் 8 பேருக்கு இடம் கிடைத்துள்ளது.

தமிழகத்தில் நீட் மருத்துவ நுழைவுத்தேர்வு அமல்படுத்தப்பட்டது முதல் மாநில வழி பாடதிட்டத்தில் பயின்ற மாணவர்கள் குறிப்பாக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வி எட்டாக்கனியானது.

தமிழக அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவர்கள் சமூகப் பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கியவர்கள் என்பதால், அவர்களைப் பிற மாணவர்களுடன் ஒரே நிலையில் ஒப்பிட்டுத் தேர்வில் வகைப்படுத்துவது என்பது சம நீதிக்கு முரணானது என்பதால் மருத்துவப் படிப்புகளில் உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முடிவு செய்தது.

இதற்காக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி பி.கலையரசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு அதன் பரிந்துரை அடிப்படையில் சிறப்புச் சட்டம் இயற்றி கடந்த செப்டம்பர் 15-ம் தேதி ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஆளுநர் அனுமதி குறித்து அரசுத் தரப்பு காத்திருந்தது. ஆளுநர் ஒப்புதல் அளிக்கவேண்டும் என அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர். அமைச்சர் குழு ஆளுநரை சந்தித்து வலியுறுத்தியது. திமுக ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடத்தியது. இந்நிலையில் கலந்தாய்வு தடைப்படுவதால் ஆளுநர் விரைந்து முடிவெடுக்க வலியுறுத்தப்பட்டது.

உயர் நீதிமன்ற நீதிபதிகளும் வலியுறுத்தினர். பின்னர் தமிழக அரசு 7.5% உள் ஒதுக்கீட்டை அமல்படுத்தி அரசாணை வெளியிட்டது. அதன் பின் மறுநாளே ஆளுநர் ஒப்புதல் வழங்கினார். இதையடுத்து மருத்துவ கலந்தாய்வு இன்று (நவ.18) காலை முதல் தொடங்கியது. முதல்நாள் சிறப்பு கலந்தாய்வில் அரசு உள் ஒதுக்கீடு பெறும் மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்கியது.

இதில் தமிழக முதல்வர் நேரடியாக கலந்துக்கொண்டு தேர்வு செய்யப்பட்ட சில மாணவர்களுக்கு ஒப்புகை சான்றிதழை அளித்தார். ஒரு மாணவிக்கு மருத்துவர் அணியும் வெள்ளை கோட் மற்றும் ஸ்டெதஸ் கோப்பை அளித்தார். அரசு ஒதுக்கீட்டில் இடம் பெற்ற பெற்றோர் மனம் உருகி முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.

இன்று அரசுப்பள்ளி மாணவர்கள் 313 பேருக்கு இடம் ஒதுக்கப்பட்டது. இதில் சென்னை மாநகராட்சிப் பள்ளியில் பயின்ற மாணவிகள் 8 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

அவர்கள் பெயர் பள்ளி விவரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

1. எ.சங்கவி - சென்னை மாநகராட்சி பள்ளி புல்லா அவின்யூ 434 - கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி

2. டி.கே.ரித்திகா - சென்னை மாநகராட்சி பள்ளி புல்லா அவின்யூ - 427- கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி

3. ஜி.நந்திதா - சென்னை மாநகராட்சி பள்ளி புல்லா அவின்யூ - 391- ஓமந்தூரார் மருத்துவ கல்லூரி

4. ஒய்.சரண்யா - சென்னை மாநகராட்சி பள்ளி சைதாப்பேட்டை -322 - ஓமந்தூரார் மருத்துவ கல்லூரி

5. டி.ஜெயப்ரதா - சென்னை மாநகராட்சி பள்ளி சைதாப்பேட்டை - 303 - ஓமந்தூரார் மருத்துவக்கல்லூரி

6. எ.காயத்ரி - சென்னை மாநகராட்சி பள்ளி தரமணி - 266 - செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரி

7. மஜிதா தஸீம் - சென்னை மாநகராட்சி பள்ளி மார்க்கெட் தெரு - 259 - தேனி மருத்துவக்கல்லூரி

8. திருசௌமியா -சென்னை மாநகராட்சி பள்ளி எம்.எச்.சாலை - செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரி

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x