Last Updated : 18 Nov, 2020 05:33 PM

 

Published : 18 Nov 2020 05:33 PM
Last Updated : 18 Nov 2020 05:33 PM

7.5% இட ஒதுக்கீடு: புதுக்கோட்டை மாவட்டத்தில் 11 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எம்பிபிஎஸ் படிக்க வாய்ப்பு

சென்னையில் இன்று நடைபெற்ற மருத்துவக் கலந்தாய்வில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே பள்ளியைச் சேர்ந்த 4 மாணவிகள் உட்பட11 அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

மருத்துவப் படிப்பில் 7.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு அடிப்படையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சென்னையில் இன்று (நவ.18) கலந்தாய்வு தொடங்கியது. 7.5% இட ஒதுக்கீடு அடிப்படையிலான கலந்தாய்வு நாளை மறுதினம் (நவ.20) வரை நடைபெற உள்ளது. முதல் நாளான இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்ச்சி பெற்ற 59 அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளில் 13 பேர் கலந்துகொண்டனர்.

அதில், கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகளான எ.திவ்யா, எம்.பிரசன்னா ஆகியோர் மதுரை அரசு மருத்துவக் கல்லூரியையும், எம்.தார்ணிகா தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரியையும், சி.ஜீவிகா சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியையும் தேர்வு செய்தனர்.

இதேபோன்று, கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர் ஆர்.ஹரிகரன், மழையூர் அரசுப் பள்ளி மாணவர் கே.பிரபாகரன், தாந்தாணி அரசுப் பள்ளி மாணவி எம்.கிருஷ்ணவேணி ஆகியோர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியைத் தேர்வு செய்தனர்.

புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி ஹெச்.சுகன்யா தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரியையும், வெட்டன்விடுதி அரசுப் பள்ளி மாணவர் எல்.அகதீஸ்வரன் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியையும், சிதம்பரவிடுதி அரசுப் பள்ளி மாணவர் டி.கவிவர்மன் கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரியையும், அரிமளம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி டி.புவனேஸ்வரி வேலூர் அரசு மருத்துவக் கல்லூரியையும் தேர்வு செய்தனர்.

ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி

கலந்தாய்வில் பங்கேற்ற வடகாடு அரசுப் பள்ளி மாணவர் பி.பவித்ரன் மற்றும் மறமடக்கி அரசுப் பள்ளி மாணவி எ.நித்யா ஆகியோர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்.

இதைத் தொடர்ந்து, 2 நாட்கள் நடைபெற உள்ள கலந்தாய்வில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 46 அரசுப் பள்ளி மாணவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மருத்துவ மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி ஆகியோர் வாழ்த்துகள் தெரிவித்தனர். மேலும், அந்தந்தப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் பாராட்டுகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x