

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட தகவல்:
“குமரிக் கடல் பகுதியில் நிலவும் மேலடுக்குச் சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். வட தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
அடுத்த 48 (19.11.2020) மணி நேரத்தில் தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸையும் ஒட்டி பதிவாகக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை பெய்த விவரம்:
காயல்பட்டினம் (தூத்துக்குடி) 21 செ.மீ., பரமக்குடி (ராமநாதபுரம்) 13 செ.மீ., பாபநாசம் (திருநெல்வேலி) 12 செ.மீ., தேவகோட்டை (சிவகங்கை), கொட்டாரம் (கன்னியாகுமரி) தலா 10 செ.மீ., கொடைக்கானல் (திண்டுக்கல்), அரிமளம் (புதுக்கோட்டை), சிவகாசி (விருதுநகர்), காரைக்குடி தலா 9 செ.மீ., நன்னிலம் (திருவாரூர்), சிவகிரி (தென்காசி), அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி), கூடலூர் (தேனி), திருச்செந்தூர் தலா 8 செ.மீ., குன்னூர் (நீலகிரி), பேரையூர் (மதுரை), தாராபுரம் (திருப்பூர்), அய்யம்பேட்டை (தஞ்சாவூர் ), மணிமுத்தாறு (திருநெல்வேலி) தலா 7 செ.மீ.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
18.11.2020 அன்று கேரளா, கர்நாடக கடற்பகுதி, லட்சத்தீவு ஆகிய பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
19.11.2020 அன்று லட்சத்தீவு கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மிக பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
மீனவர்கள் மேற்கூறிய பகுதிகளுக்குச் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்”.
இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.