Published : 18 Nov 2020 01:19 PM
Last Updated : 18 Nov 2020 01:19 PM

மெரினாவில் பொதுமக்களை அனுமதிப்பது எப்போது?- உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

மெரினா கடற்கரையில் பொதுமக்களை அனுமதிப்பது எப்போது என டிசம்பர் முதல் வாரத்தில் முடிவெடுக்கப்படும் எனத் தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், அரசு முடிவெடுக்காவிட்டால் நாங்கள் உத்தரவிடுவோம் என உயர் நீதிமன்றம் மீண்டும் தெரிவித்துள்ளது.

சென்னை மெரினா கடற்கரையில் மீன் அங்காடிகளை முறைப்படுத்துவது தொடர்பாகவும், கடற்கரையைத் தூய்மைப்படுத்துவது தொடர்பாகவும் தொடரப்பட்ட வழக்குகள், மீனவர்கள் நல அமைப்பின் பீட்டர் ராயன் தொடர்ந்த வழக்கு ஆகியவை நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் ரமேஷ் அடங்கிய அமர்வில் விசாரணையில் உள்ளன.

கடந்த 11-ம் தேதி வழக்குகள் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், மெரினாவைச் சுத்தப்படுத்துவதற்குப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், லூப் சாலை ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு, மீண்டும் ஆக்கிரமிப்புகள் முளைக்காமல் கண்காணிக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், உயர் நீதிமன்ற உத்தரவின்படி, சென்னை மாநகராட்சி ஆணையரும், காவல் ஆணையரும் மெரினாவில் திடீர் சோதனைகள் நடத்தியதாகவும் கூடுதல் தலைமை வழக்கறிஞர் குறிப்பிட்டார். மெரினா கடற்கரையில் தள்ளுவண்டிகளுக்கான டெண்டரைத் திறக்கத் தனி நீதிபதி தடை விதித்துள்ளதால், அந்த டெண்டரைத் திறக்க இயலவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இதையடுத்து, தனி நீதிபதி முன் உள்ள வழக்கை, இந்த வழக்குகளுடன் சேர்த்து விசாரணைக்குப் பட்டியலிட நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பின்னர், ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் மெரினா கடற்கரை பொதுமக்களுக்கு எப்போது திறக்கப்படும் என அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு, நவம்பர் இறுதி வரை மெரினாவைத் திறக்க வாய்ப்பில்லை என அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் பதிலளித்தார்.

“ஊரடங்கு தளர்த்தப்பட்டு, திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், மெரினா கடற்கரையைப் பொதுமக்களுக்குத் திறப்பதில் தாமதம் ஏன்?” எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ''இந்த விஷயத்தில் அரசு முடிவெடுக்காவிட்டால், நீதிமன்றம் உத்தரவிட நேரிடும்'' எனவும் எச்சரித்தனர்.

பின்னர் நீதிபதிகள், வழக்கு விசாரணையை நவம்பர் 18-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். இந்நிலையில் வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் ரமேஷ் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசுத் தரப்பில், “மெரினா கடற்கரையில் பொதுமக்களை அனுமதிப்பது குறித்து டிசம்பர் முதல் வாரத்திற்குள் முடிவெடுக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டது.

''முடிவெடுக்காவிட்டால் நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்கும்'' என நீதிபதிகள் வினீத் கோத்தாரி, எம்.எஸ்.ரமேஷ் அமர்வு தெரிவித்தது.

மெரினாவில் மீன் அங்காடிகளை முறைப்படுத்துவது தொடர்பான வழக்கில், 900 தள்ளுவண்டிகளுக்கான டெண்டர் நடவடிக்கைகளை மேற்கொள்ள சென்னை மாநகராட்சிக்கு அனுமதி அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

லூப் சாலை மற்றும் மீன் சந்தைகளை முறைப்படுத்துவது தொடர்பாக 2 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை டிசம்பர் 3-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x